நிதி பிரச்சனை: 8 பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 7 மாதமாக 'நோ சம்பளம்'
டெல்லி: நலிவடைந்துள்ள 8 பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் சம்பளமே வழங்கவில்லை என்று மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பிரஃபுல் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது,
ஹெச்எம்டி வாட்சஸ், ஹெச்எம்டி சினர் வாட்சஸ், ஹெச்எம்டி பேரிங்ஸ், திரிவேணி ஸ்ட்ரக்சுரல்ஸ், துங்கபத்ரா ஸ்டீல் புராடக்ட்ஸ், என்.இ.பி.ஏ., ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் ஆகிய 8 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
எனவே, கனரக தொழில் துறையின் கீழ் இயங்கும் இந்த பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாட்டுக்கான நிதியை திரட்ட முடியாத சூழல் உள்ளது. இதனால் இதன் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை.
ஊழியர்களின் சம்பள பாக்கியை வழங்குவதற்காக நலிந்த நிறுவனங்களுக்கு அவ்வப்போது திட்டமில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான சம்பள பாக்கியை வழங்குவதற்காக ரூ.81.92 கோடி வழங்க மார்ச் மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
2012-13 நிதியாண்டில் கனரக தொழில் துறையின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி ரூ.56,506 கோடியாக அதிகரித்துள்ளது. 2011-12இல் இது ரூ.56,009 கோடியாக இருந்தது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications