புதுச்சேரி மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் அறிவித்த ஜெயலலிதா..அப்ப தமிழ்நாட்டில் உயர்த்தியது?

இதுதொடர்பாக தமிழக முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
விலைவாசி உயர்வுக்கு வித்திடும் வகையில் புதுச்சேரி மாநில அரசு அனைத்துப் பிரிவினருக்குமான மின் கட்டணத்தை 45 விழுக்காடு உயர்த்தி, மக்களை பெருத்த இன்னலுக்கு ஆளாக்கி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்திற்குமான மின் கட்டணத்தை பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அதிரடியாக புதுச்சேரி மாநில அரசு உயர்த்தி இருக்கிறது. இந்த மின் கட்டண உயர்வு காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், வர்த்தக நிறுவனங்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தாங்கள் செய்யும் தொழிலுக்கான கட்டணங்களை உயர்த்துவார்கள். தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரக் கூடும்.
புதுச்சேரி மாநில அரசின் நிர்வாகத் திறமையின்மையால் ஏற்கெனவே சீரழிந்து வரும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை இந்த மின் கட்டண உயர்வு மேலும் சீரழிய வழி வகுத்துள்ளது.
மின் கட்டண உயர்வை அறிவித்துள்ள புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் மே 4ம் தேதி காலை 10.45 அளவில், பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை எம்.பி. தலைமையிலும், புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் ஏ. அன்பழகன், எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அப்போ தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு யார் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்?
தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுமா?:
இந் நிலையில் தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுமா என்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்), மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை திருத்த கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறது. இதனால் மக்களிடையே மின் கட்டணம் உயரும் அச்சம் உள்ளது. எனவே மின் கட்டணம் உயர்த்தபபடுமா? என்றி கேட்டார்.
இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்து மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின் பேரில் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துகிறது. அதன்பேரில் இன்று சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.
பொது மக்களிடம் கருத்துகளை கேட்டு முடிந்ததும் மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று மின் கட்டணத்தை மாற்றி அமைக்கப்பட வேண்டுமானால் பொது மக்களை பாதிக்காத வகையில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என்றார்.












Click it and Unblock the Notifications