ராமதாஸை குண்டாஸ்ல போடுங்க… அரசுக்கு கோரிக்கை வைத்த தேமுதிக எம்.எல்.ஏ
புதுக்கோட்டை: அப்பாவி மக்களிடையே சாதி மோதலை தூண்டி விடும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தே.மு.தி.க. கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் தே.மு.தி.க சார்பில் மே தின பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில், சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட அக் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் பார்த்தசாரதி பேசியதாவது:
தமிழகத்தில் பாமக வன்முறையை கையில் எடுத்து அரசியல் செய்து வருகின்றது. இதை உடனே அடக்கவில்லை எனில் வரும் காலத்தில் பலரும் இதே போல செய்ய முயற்சி செய்வார்கள்.
கடந்த வாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தேமுதிக தலைவர் விஜயகாந்தினை சந்தித்து ஒரு சி.டி.யையும், இரண்டு புகைப்படங்கயும் கொடுத்தார். அந்த சிடியை பார்த்தால் உண்மை புரியும். பாமக நாடகம் வெளியே வரும்.
உண்மையிலேயே ஒரு காலனியில் இருந்த ஆறு குடிசைகளை எரித்திருக்கிறார்கள். அதே போன்று கள்ளக்குறிச்சியில் ஒருத்தரை அடித்தே கொலை செய்துள்ளனர். இப்படி ஒரு ஜாதி அரசியலை செய்து கொண்டிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
உண்மையிலேயே ராமதாஸுக்கு விவசாயிகள் மீது அக்கறை இருந்திருந்தால் தனது மகனுக்கு நீர் பாசனத்துறை அமைச்சர் பதவி வாங்கி கொடுத்திருக்க வேண்டும். ஏன் சுகாதாரத்துறையை வாங்கி கொடுத்தார்.
வன்னியர்கள் அதிகமிருக்கும் விருத்தாசலத்தில் நின்று தான் விஜயகாந்த் வெற்றி பெற்றார். சாதி அரசியல் என்கிற பெயரில் அப்பாவி மக்களை பழிவாங்கும் ராமதாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications