தூத்துக்குடி-நெல்லை 4 வழிச்சாலை டோல்கேட் வசூல்-வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை
தூத்துக்குடி: தூத்துக்குடி-நெல்லை நான்குவழிச்சாலை டோல்கேட் வசூலுக்கு தடை விதிக்ககோரி வியாபாரிகள், பொதுமக்கள் டோல்கேட்டை முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடியையும், நெல்லையையும் இணைக்கும் வகையில் கடந்த 2010ம் ஆண்டு நான்குவழிச்சாலை அமைeli-க்கும் பணிகள் 350 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் துவங்கப்பட்டது.
ரஷ்ய நாட்டை சேர்ந்த டிரான்ஸ்ட்ராய் என்ற தனியார் நிறுவனம் இப்பணிகளை மேற்கொண்டுள்ளது. நெல்லை கே.டி.சி நகரில் இருந்து தூத்துக்குடி பைபாஸ் வரையுள்ள 45 கிலோ மீட்டர் தூரமானது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
நான்கு வழிச்சாலைப்பணிகள் முற்றிலுமாக நிறைவடைவதற்கு முன்பாகவே நெல்லை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள தட்டப்பாறை விலக்கில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கடந்த மாதமான ஏப்ரல் 5ம் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனால், புதுக்கோட்டை, தட்டப்பாறை, கூட்டாம்புளி, சாயர்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள இந்த டோல்கேட்டை அகற்றக்கோரி புதுக்கோட்டை சுற்றுவட்டார வியாபாரிகள் இன்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து, வியாபாரிகள் சங்கத்தலைவர் பீட்டர், சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் பொதுமக்கள் டோல்கேட்டை முற்றுகையிட முயன்றனர்.
தகவல் அறிந்த போலீசார் ரூரல் டி.எஸ்.பி நாராயணன், தாசில்தார் ஆழ்வாரம்மாள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டோல்கேட் வசூல் குறித்து கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில், நான்குவழிச்சாலை பணிகள் முற்றிலுமாக நிறைவடைவதற்கு முன்பாக வாகனங்களுக்கு சுங்க வரிவசூல் செய்வதற்கு கலெக்டர் உடனடியாக தடை விதிக்கவேண்டும். இல்லாதபட்சத்தில் மதிமுக சார்பில் வாகனஓட்டிகள், பயணிகள் மற்றும் கிராமமக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications