பாமக வன்முறையால் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் பாதிப்பு- கோடிக்கணக்கில் இழப்பு
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாவட்டங்களில் பாமகவினர் நடத்தி வரும் தொடர் வன்முறைச் சம்பவங்களால் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. தினசரி கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
வட மாவட்டங்கள் பலவற்றில் அரசுப் பேருந்துகள் தொடர்ந்து குறி வைத்துத் தாக்கப்படுகின்றன. கல்வீச்சு நடத்தப்படுகிறது. தீவைப்பும் தொடர்கிறது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை தினசரி ரூ. 25 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறதாம். அங்கு தினசரி ரூ. 65 லட்சம் டிக்கெட் கட்டணம் மூலம் வசூலாகுமாம். ஆனால் தற்போது வன்முறை காரணமாக வசூல் பெருமளவில் சரிந்துள்ளது. இரவு நேர பஸ் போக்குவரத்து ரத்து உள்ளிட்டவை இதற்குக் காரணமாகும்.
ஒரு மாவட்டத்திலேயே இந்த அளவுக்கு நஷ்டம் என்பதால் வட மாவட்டங்களில் உள்ளி பிற போக்குவரத்துக் கழகங்களும் இதே அளவிலான நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாமக தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலைச் செய்யக் கோரியும் விருத்தாசலத்தில் கடந்த சனிக்கிழமை கடையடைப்பு நடைபெற்றது.
ஜெயங்கொண்டம், மீன்சுருட்டியில் ஞாயிற்றுக்கிழமை கடையடைப்பு நடைபெற்றது. செந்துறை, மாத்தூர், பொன்பரப்பி ஆகிய பகுதிகளில் இன்று முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் இன்று பாமகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
அரியலூரில் இருந்து செந்துறை வழியாக குழுமூர், இரும்பிலிக்குறிச்சி, பரணம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், மாத்தூர் போன்ற பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டத்தில் இருந்து கடந்த 5 நாட்களாக செந்துறைக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அரியலூரில் இருந்து செந்துறைக்கு கடந்த 3 நாட்களாக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடையடைப்பு மற்றும் பேருந்து போக்குவரத்து முற்றிலும் தடை பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications