கர்நாடக காங்கிரசில் ஆரம்பித்தது கலாட்டா: 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் எனக்கே என்கிறார் சித்தராமையா!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. இருப்பினும் யார் முதல்வர் என்பது இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. கர்நாடகத்தைப் பொறுத்தவரையில் தேர்தலில் தோற்றுப் போன மாநில தலைவர் பரமேஸ்வர், மத்திய அமைச்சர்கள் மல்லிகார்ஜூன கார்கே, வீரப்ப மொய்லி மற்றும் கடந்த சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித்தராமையா ஆகியோரில் ஒருவர் முதல்வராக இருக்கக் கூடும் என்று காங்கிரஸ் வட்டார செய்திகள் தெரிவித்து வருகின்றன.
ஆனால் இதில் சித்தராமையா எப்படியும் முதல்வராகிவிடுவது என்பதில் மும்முரம் காட்டுவதாகவே தெரிகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே தி ஹிந்து நாளேட்டுக்குப் பேட்டியளித்திருந்த அவர், இதுவே தான் போட்டியிடும் கடைசித் தேர்தல் என்று கூறியிருக்கிறார். அதாவது இந்த முறை முதல்வர் பொறுப்பு கொடுத்துவிடுங்கள்.. இனி நான் தேர்தலில் கூட போட்டியிட மாட்டேன் என்பதுதான் அவரது பேட்டியின் உட்பொருளாக உணரப்படுகிறது.இதேபோல் மல்லிகார்ஜூன கார்கேவும் கூட, கட்சித் தலைமை கட்டளையிட்டால் அதை ஏற்றுக் கொள்வேன் என்று சொல்லியிருந்தார்.
இந்த நிலையில் சித்தராமையா விடாப்பிடியாக இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சட்டசபை உறுப்பினர்கள் 120 பேருமே என்னுடன் தான் இருக்கின்றனர்.. எனக்கே ஆதரவு தருகின்றனர். டெல்லியில் இருந்து கட்சி மேலிடப் பார்வையாளர்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனர். அவர்கள் எம்.எல்.ஏக்களின் கருத்தைக் கேட்டறிந்து கட்சி தலைமையிடம் தெரிவிப்பர். அதன் பின்னர் கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனால் மேலிடப் பார்வையாளர்கள் என்று காங்கிரஸ் தலைமையிலிருந்து யார் வந்தார்கள்... யார் முதல்வர் என்பது எப்போது அறிவிக்கப்படும் என்பது பற்றியெல்லாம் அவர் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் சித்தராமையா ரொம்பவுமே நம்பிக்கையாக இருக்கிறார்...நிச்சயம் தாமே முதல்வர் என்பதில்!
சித்தராமையாவின் பின்னணி
1970களின் இறுதியில் அரசியலுக்கு வந்த சித்தராமையா 1980களில் ஜனதா கட்சியில் இணைகிறார். பின்னர் ஜனதா தளத்திலும் முக்கிய பொறுப்புகள் வகிக்கிறார். 1996ஆம் ஆண்டு ஜே.எச். படேல் முதல்வராக இருந்த போது துணை முதல்வராக நியமிக்கப்பட்டவர் சித்தராமையா..தேவ கவுடா தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் உதயமான போதும் அதில் பயணித்தவர். 2004-ம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து அரசு அமைத்த போது தரம்சிங் முதல்வராகவும் சித்தராமையா துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர்.
2006ஆம் ஆண்டு தேவகவுடாவுடனான கருத்து வேறுபாட்டால் மதச் சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது நடைபெற்ற இடைத் தேர்தலில் 257 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாஜகவும் மதச் சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து வேட்பாளரை நிறுத்தியிருந்தன. 2008 ஆம் ஆண்டும் தற்போதைய தேர்தலிலும் அடுத்தடுத்து சித்தராமையா வெற்று பெற்று முதல்வர் நாற்காலியில் எப்படியும் அமருவது என நம்பிக்கையோடு இருக்கிறார்!












Click it and Unblock the Notifications