ஜெகனின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி! 4 மாதம் சிறை வாசம் தொடரும்!!

சிபிஐயால் கடந்த ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் சிறையிலடைக்கப்பட்டு ஓராண்டு காலம் நெருங்குகிறது. அவரது ஜாமீன் மனு கீழ் நீதிமன்றங்களில் நிராகரிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கியதற்கு தண்டனையாகவே இந்த வழக்கு போடப்பட்டிருப்பதாக ஜெகனின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மேலும் ஓராண்டு காலமாக சிறையில் இருக்கிறார் ஜெகன்... ஆனால் சிபிஐ தரப்போ இன்னமும் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது என்று கூறுவதை ஏற்கக் கூடாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.
ஆனால் இந்த வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஜெகனுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டால் விசாரணையை பாதிக்கும் என்றும் சிபிஐ தரப்பு தமது விசாரணையை 4 மாத காலக் கெடுவுக்குள் முடித்துவிட வேண்டும் என்றும் கூறி ஜெகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். அதே நேரத்தில் சிபிஐயின் இந்த விசாரணை முடிந்த பிறகு விசாரணை நீதிமன்றத்தில் ஜெகன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் சிபிஐ விசாரணை நடத்தி முடிக்க விதிக்கப்பட்டிருக்கும் காலக்கெடுவான மேலும் 4 மாதமும் ஜெகன் சிறையில்தான் இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்றத்துக்கு வந்திருந்த ஜெகன் மோகனின் மனைவி, இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று விமர்சத்திருந்தார்.
இதே வழக்கில் ஜெகனின் உதவியாளர்களான விஜய் சாய் ரெட்டி மற்றும் நிம்மகட்டா ரெட்டி ஆகியோரது ஜாமீன் மனுக்களையும் அதிரடியாக நிராகரித்த உச்சநீதிமன்றம், இவரும் ஜூன் 5க்குள் நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications