திரும்பிப்போக காசில்லாததால் தலைமறைவான பாகிஸ்தானி: அரசு செலவில் திருப்பி அனுப்பப்பட்டார்
சென்னை: சிகிச்சைக்காக சென்னை வந்து பின் தலைமறைவானதாக தேடப்பட்டு வந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆந்திராவில் சிக்கியதைத் தொடர்ந்து, அவர் விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியை சேர்ந்த நசீர் அகமது (வயது 43), சிறுநீரக பாதிப்பிற்கு சிகிச்சை பெற, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் இருந்து சென்னை புறநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
அப்போது குடியுரிமை துறை மற்றும் போலீசில் தான் இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்து இருப்பது குறித்து பதிவு செய்து இருந்தார். ஆனால், சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த நஷீர் பாகிஸ்தானுக்கு திரும்பி செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடியுரிமை அதிகாரிகள் நசீர் அகமதை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆந்திர மாநில போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி கடப்பா அருகே உள்ள ராயசோட்டி என்ற கிராமத்தில் இருந்த நசீர் அகமதை மடக்கி பிடித்தனர். விசாரணையில், மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வந்த பணம் அதற்கே சரியாக போனதால், பாகிஸ்தானுக்கு திரும்பி செல்ல பணம் இன்றி நஷீர் வாடியது தெரிய வந்தது. இது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உடனே பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நசீர் அகமதுவின் விமான பயணத்திற்கான செலவு தொகையை ஏற்பதாக கூறினார்கள். இதையடுத்து கடப்பா நீதிமன்றத்தில் நசீர் அகமது ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு முனையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு,ர் கொழும்பு சென்ற விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார் நஷீர். அங்கிருந்து பாகிஸ்தான் செல்லும் விமானத்தில் நசீர் அகமதுவை அனுப்பி வைக்குமாறு கொழும்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications