ஆயிரக்கணக்குல ஓட்டு வாங்கிட்டோம்ல… டெபாசிட் இழந்தும் மார்தட்டும் அதிமுக
பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், ஐந்து இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க., அத்தனையிலும் டெபாசிட்டை இழந்து சாதனை படைத்திருக்கிறது! அவர்கள் வாங்கியது வெறும் 4 எண்ணிக்கை அளவிலான வாக்குகள் மட்டுமே.
தமிழர்கள் அதிகமாக வசிக்கக் கூடிய 5 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அதிமுக போட்டியிட்டது. தமிழக அமைச்சர்களும், அ.தி.மு.க. ஆதரவு நடிகர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களுக்கு படுதோல்வியே பரிசாகக் கிடைத்தது. அவர்களால் டெபாசிட்டைக் கூட காப்பாற்ற முடியவில்லை.
ஆயிரக்கணக்கில்தான்
காந்தி நகரில் போட்டியிட்ட மாநில அ.தி.மு.க. செயலாளர் வா.புகழேந்தி 3196 வாக்குகளும், ராஜாஜி நகரில் போட்டியிட்ட கே.முனுசாமி 1660 வாக்குகளும், நரசிம்ம ராஜா தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரன் 1001 வாக்குகளும், ஹனூர் தொகுதியில் போட்டியிட்ட ரவி 2370 வாக்குகளும், கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட்ட அன்பு 2052 வாக்குகளும் மட்டுமே பெற்றனர்.
இப்படி நான்கு இலக்க எண்ணிக்கை அளவிலான வாக்குகளை பெற்றும் கொஞ்சமும் கலங்காமல் போனதடவைக்கு இந்த தடவை பரவாயில்லைங்க என்கின்றனர். போன முறை நூத்துக்கணக்குல தான் ஓட்டு இருந்துச்சு. இப்ப ஆயிரக் கணக்குல வாங்கிட்டோம்ல" என்று மார் தட்டுகிறார்கள் கர்நாடகாவில் வசிக்கும் அம்மா கட்சிக்காரர்கள்.
எம்.ஜி.ஆர் காலத்தில்
''எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கர்நாடகாவில் அ.தி.மு.க பல இடங்களில் வெற்றி பெற்று அம்மாநில சட்டமன்றத்திற்குள் நுழைந்து தமிழர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறது. அவருக்கு பிறகு, 1994 ஆம் ஆண்டு கூட ஒரு இடத்தை பிடித்தது. ஆனால் இம்முறை டெபாசிட்டை கூட வாங்க முடியவில்லை.
தேசிய அரசியலில் அக்கறை காட்டும் ஜெயலலிதா கர்நாடகத்தில் இருக்கும் தமிழ் வாக்காளர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாயாவதி போல ஜெயலலிதாவும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால் குறைந்தது 3 இடங்களாவது கிடைத்திருக்கும் என்கிறார்கள் கர்நாடகா பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications