பெரம்பலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே பாலத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை ஆரியபுரத்தை சேர்ந்தவர் மைலாப்பூர் தொகுதி தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயம். இவரது மகன் செந்தில் (வயது 34). இவர் தனது மனைவி உறவினர்கள் 6 பேருடன் ஸ்கார்பியோ காரில் திருச்செந்தூர், பழனி கோவிலுக்கு சென்றனர்.
நேற்று காலை திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு மாலையில் பழனி திரும்பினர். அங்கிருந்து இரவு சென்னை திரும்பிக்கொண்டு இருந்தனர். காரை டிரைவர் சீனிவாசன் என்பவர் ஓட்டிவந்தார்.
இன்று அதிகாலை 4 மணிளவில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை அடுத்த விஜயகோபாலபுரம் என்ற கிராமம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் இருந்த பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த குழந்தைகள் உள்பட அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். கார் கவிழ்ந்ததும் காருக்குள் இருந்த அனைவரும் கூச்சல் போட்டனர்.
இந்த கோர விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயத்தின் மகன் செந்தில், உறவினரான சென்னை அயனாவரத்தை சேர்ந்த லோகநாதன் (45), அவரது மனைவி ரேணு லட்சுமி (40), விழுப்புரம் மாவட்டம் ஏமாப்பூரை சேர்ந்த தலைமை காவலர் ரமேஷ் (38) ஆகிய 4 பேரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
மேலும் இந்த விபத்தில் பலியான செந்திலின் மனைவி கவிதா, ரமேசின் மனைவி ஆனந்தி, லோகநாதனின் மகன் தருண்பிரகாஷ் (9), கார் டிரைவர் சீனிவாசன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த பாடாலூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கார் கதவை உடைத்து உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டனர். நால்வரும் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications