அடமானத்தில் மூழ்கிப் போன நிலம்.. மீட்கக் கோரி கலெக்டரை அணுகிய மூதாட்டி
தூத்துக்குடி: அடமானம் வைத்த நிலத்தை மீட்டுத்தரவேண்டும் என்று வயதான பெண்மணி ஒருவர் தூத்துக்குடி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள எல்லப்பன்நாயக்கன்பட்டியை சேர்ந்த நாகலட்சுமி பங்கேற்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது மகளின் திருமணத்திற்காக கடந்த 1993ம் ஆண்டு எனது கணவர் பேச்சிநாயக்கர் எங்கள் ஊரைச்சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவரிடம் 6.27சென்ட் நிலத்தை 10ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்துவிட்ட நிலையில் நிலத்தை மீட்பதற்காக நவநீதகிருஷ்ணனிடம் சென்று கேட்டபோது அவர் ஒரு லட்சரூபாய் கொடுத்தால் தான் நிலத்தை ஒப்படைக்கமுடியும் என்று சொல்லிவிட்டார். இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வறுமையில் நான் வாடும் நிலையில் அடமானம் வைத்த எனது நிலத்தை மீட்டுத்தரவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
நாகலட்சுமியின் மகள், மருமகன் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்துவிட்டனர். அவர்களது குழந்தைகள் இருவரையும் நாகலட்சுமி தான் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications