தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி

புதுவையில் ராஜீவ் நினைவு ஜோதி யாத்திரை வழியணுப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது,
புதுவை மக்கள் காங்கிரஸ் மீதும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர். ராஜீவ் காந்தி தான் பிரதமராக இருக்கையில் இந்தியாவை வல்லரசு நாடாக்க பாடுபட்டார். அவருடைய பதவி காலத்தில் புதிய கல்வி கொள்கை, தொழில் மற்றும் அறிவியல் கொள்கைகள் கொண்டு வரப்பட்டன.
தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்பதில் ராஜீவ் காந்தி முனைப்பாக இருந்தார். அவருடைய காலத்தில் அஸ்ஸாம், மிசோரம், பஞ்சாப் மாநிலங்களில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டது. மேலும் இலங்கையில் தீவிரவாதத்தை ஒடுக்க அமைதிப் படையை அங்கு அனுப்பி வைத்தார். இது தவிர இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கப்பல் மூலம் உணவு பொருட்களை அனுப்பி வைத்தார். அந்த உணவு பொருட்களை வாங்க இலங்கை ராணுவம் முன்வராதபோது அவற்றை விமானம் மூலம் தமிழர்களின் பகுதியில் போடச் செய்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தால் நாம் அவரை இழந்தோம்.
தீவிரவாதத்திற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் ஒரு கூட்டம் தமிழகம் மற்றும் புதுவையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்மையில் திரைப்பட இயக்குனர் சீமான் கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரினார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் புகைப்படத்தை பிரசுரித்து கூட்டம் நடத்த அவர் அனுமதி கோரினார். அந்த கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. அரசின் செயல் நியாயமானது.
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரன் என்கின்றனர். அவர் ஒரு கோழை. பெண்கள், சிறுவர்கள் மற்றும் அப்பாவி மக்களை போரில் கேடயமாக பயன்படுத்தியவர் ஒரு வீரனா? ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்றபோது ராணுவ வீரரால் தாக்கப்பட்டார். அந்த தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பினார்.
வெற்றியோ, தோல்வியோ போரை முன் நின்று நடத்துபவர் தான் வீரன், பதுங்கிக் கொண்டவர்கள் அல்ல. சீமான் தன்னுடைய கூட்டத்தில் காஷ்மீர் தீவிரவாதி யாசின் மாலிக்கை அழைத்து வந்து பேச வைத்துள்ளார். தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவற்றை தூண்டிவிடுபவர்கள் தேச துரோகிகள். பலமுறை சிறைக்கு சென்ற சீமான் மீண்டும் சிறைக்கு செல்ல விரும்புகிறார். தமிழக அரசின் வழக்குக்கு பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் வைக்க வேண்டும். நக்சலைட்டுகளின் தீவிரவாதத்தையும், அசாம் தீவிரவாதத்தையும் ஒடுக்கியுள்ளோம்.
எங்களை பொறுத்த வரை சீமான் போன்றோர் சுண்டைக் காய்கள். இந்தியாவில் இருந்து கொண்டு நம் நாட்டுக்கே எதிராக செயல்படுபவர்களை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications