ஐபிஎல் சூதாட்டம்: சென்னையில் 160 தரகர்கள்… கும்பல் தலைவன் பிரசாந்திற்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு
சென்னை: சென்னையில் ஐபிஎல் சூதாட்டத்தில் 160க்கும் அதிகமான தரகர்கள் செயல்பட்டு வந்தது சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலின் தலைவனாக கருதப்படும் பிரசாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 வீரர்கள் சிக்கினர்.
சென்னையிலும் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட சூதாட்ட கும்பல் தலைவன் பிரசாந்த் மற்றும் 6 தரகர்களும் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள், லேப்-டாப் ஆகியவையும் சிக்கின. சொத்து ஆவணங்கள் மற்றும் பலகோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் 160 தரகர்கள்
பிரசாந்த் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளான சஞ்சய் பாவ்னா, உத்தம் சி.ஜெயின் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய தகவல்களை திரட்டியுள்ளனர். பிரசாந்தின் கீழ் 160க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய தரகர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் தொகையாக பெற்றுள்ளார் பிரசாந்த்.
அரசியல் தொடர்பு
மேலும் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரும் பிரசாந்துக்கு நெறுங்கிய நண்பராக விளங்கியுள்ளார். இவர்களை பிரசாந்த் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி உள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இவர்களுடன் பிரசாந்த் தகவல்களை பரிமாறிக் கொண்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு கோடிகளை குவித்த பிரசாந்த் குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகர்களுடன் நெறுங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
இதற்காக பிரசாந்தை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது அவர் யார்-யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.
சிபிசிஐடி போலீஸ் கஸ்டடி
இந்த சூழலில், ஏற்கனவே கைதாகி சிறையில் இருந்த தரகர்கள் ஹரிஸ் பஜாஜ், பப்பு, வேதாச்சலம், லக்கி ஆகிய 4 பேரை காவலில் எடுத்த சிபிசிஐடி போலீசார், அவர்களிடம் விடியவிடிய விசாரணை நடத்தினர். இதில், ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்களுடனான தொடர்பு குறித்தும் மற்ற மாநில சூதாட்டக் கும்பல்களுடன் உள்ள தொடர்பு பற்றியும் விசாரிக்கப்பட்டது. கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சூதாட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு 4 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். தலைமறைவாக உள்ள சஞ்சய் பாவ்னா, உத்தம்சி ஜெயின் உள்ளிட்ட 7 புரோக்கர்களை பிடிக்கவும் போலீசார் வலை விரித்துள்ளனர்.இவர்களில் சஞ்சய் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பி சென்று விட்டார். உத்தம் சி. ஜெயின் புனேயில் பதுங்கியுள்ளார்.
இதையடுத்து அமைக்கப்பட்ட 6 சிறப்புப் படையினர், தரகர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் தொடங்கிய சூதாட்ட புகார் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்பூர் நகரங்களிலும் தோண்டத் தோண்ட பூதம்போல தரகர்கள் கிளம்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications