20 அடியாக சரிந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்.. குறுவை சாகுபடி என்னவாகும்?
சென்னை: மேட்டூர் அணையில் 17 ஆண்டுகளுக்குப்பின் 20 அடிக்குக் கீழே நீர்மட்டம் சரிந்துள்ளதால் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பருவமலை பொய்த்ததன் காரணமாகவும், காவிரி நீரை தர கர்நாடகா மறுத்ததாலும் மேட்டூர் அணை வேகமாக வரண்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசன கால்வாய் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காக, கடந்த சில நாட்களாக விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால், திங்கட்கிழமை மாலை முதல் விநாடிக்கு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
அதே நேரத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், அணைக்கு வரும் நீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டது. வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 49 கன அடியாக இருக்கிறது. மொத்த இருப்பு 4.06 டி எம் சி நீர் மட்டுமே உள்ளது.
20 அடியாக குறைந்தது
கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 20 அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததாலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு போன்றவை வறண்டு போனதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஜூன் 12ல் அணை திறப்பு
வழக்கமாக ஜூன் 12ம் தேதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இல்லாதது, டெல்டா மாவட்ட பாசன விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பருவமழையை நம்பி
அதே சமயத்தில் பருவ மழை தொடங்கினாலும், கர்நாடகாவில் உள்ள அணை நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு உபரி நீர் வந்து சேரும் நிலை உள்ளது.
குறுவை சாகுபடி மேட்டூர் அணை திறப்பு
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் செப்டம்பர் மாதத்தில் அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு அணை முற்றிலும் வறண்டு விட்டது. எனவே இந்த ஆண்டு குறுவை சாகுபடியும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள். பருவமழை கைகொடுத்தால் மட்டுமே டெல்டா விவசாயம் என்பது சாத்தியமாகும் நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications