சத்தீஸ்கரில் காங்கிரஸ் பேரணியில் நக்சலைட் தாக்குதல்: மாநில தலைவர் உள்பட 25 பேர் பலி
ராய்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் பட்டேல், மூத்த தலைவர் மகேந்திர கர்மா உள்பட 25 பேர் பலியாகினர். இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சத்தீஸ்கர் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் பரிவர்தன் பேரணி நடந்தது. அப்போது பொதுமக்கள் போன்று சாதாரண உடையில் சுமார் 250 நக்சலைட்டுகள் வந்து பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி சுக்மாவில் இருந்து ஜக்தல்பூருக்கு திரும்பியபோது நக்சலைட்டுகள் திடீர் என்று தாக்குதல் நடத்தினர். இதில் பேரணியில் கலந்து கொண்ட மூத்த தலைவர் மகேந்திர கர்மா, முன்னாள் எம்.எல்.ஏ. உதய் குமார் முதலியார் உள்ளிட்ட 25 பேர் பலியாகினர். சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் பட்டேலும், அவரது மகனும் நக்சலைட்டுகளால் நேற்று கடத்தப்பட்டனர். இந்நிலையில் அவர்களின் உடல்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன.
இறந்தவர்களில் 20 போலீசாரும் அடக்கம். கர்மா காங்கிரஸ் ஆட்சியில் சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சராக இருந்தவர். அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் காயமடைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான விசி சுக்லா விமானம் மூலம் ராய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உடலில் 3 துப்பாக்கி குண்டுகள் பாயந்ததில் அவரது கல்லீரல் மற்றும் நுரையீரல்கள் சேதமடைந்துள்ளன.
இது குறித்து அறிந்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு ராய்பூர் சென்று அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் இன்று சத்தீஸ்கர் சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதுயில் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications