ராமதாஸ் இன்று வீடு திரும்பிவிட்டார், யாரும் சந்திக்க வர வேண்டாம்: அன்புமணி வேண்டுகோள்
சென்னை: இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பிவிட்டதாக அவரது மகனும், கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் 12 நாள் சிறை வாசத்திற்குப் பிறகு கடந்த மே 11ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அன்றிரவு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் அடிப்படையில் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையின்படி ராமதாசுக்கு கடந்த மே 20ஆம் தேதி இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் பின்னர் கடந்த 8 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர கவனிப்புப் பிரிவிலும், தனி வார்டிலும் மருத்துவர் அய்யா அவர்கள் மருத்துவம் பெற்று வந்தார்.
ராமதாஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ராமதாஸ் அடுத்த 15 நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதால் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளும், நண்பர்களும் மருத்துவர் அய்யா அவர்களை சந்திக்க நேரில் வருவதை தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ராமதாஸ் குணமடைய வேண்டும் என்று நேரிலும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்திய அனைத்து சொந்தங்கள் மற்றும் நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications