திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா அண்ணன் மகன் வெங்கடேஷ்
திருச்சி: கொலை மிரட்டல் வழக்கில் கைதாகியுள்ள சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன்தான் வெங்கடேஷ். இவர் தஞ்சையில் வசித்து வருகிறார். அதிமுக இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறையின் மாநில செயலாளராக படு பந்தாவாக வலம் வந்தவர். ஆனால் சசிகலா ஜெயலலிதாவால் நீக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டபோது வெங்கடேஷ் உள்பட சசிகலாவின் உறவினர்களும் கூண்டோடுஒதுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு, வெங்கடேஷ் வீட்டின் அருகில் உள்ள விசுவநாதன் என்பவர் தனது வீட்டிற்கு செல்லும் பாதையை சேதப்படுத்தியதாகவும், இதைக்கேட்ட தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் டாக்டர் வெங்கடேஷ் மீது புகார் செய்தார்.
ஆனால் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து விசுவநாதன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கும் படி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
அதன்பேரில் தஞ்சை நகர டிஎஸ்பி அர்ச்சுனன் மற்றும் போலீசார் நேற்று மதியம் தஞ்சை காந்தி நகரில் உள்ள வெங்கடேஷ் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு வெங்கடேஷ் இல்லை என்பதும், அவர் சென்னையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சை போலீசார், சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னையில் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பாதுகாப்புடன் தஞ்சைக்கு இரவு 9.15 மணிக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வெங்கடேசுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் இரவு 10.25 மணி அளவில் டாக்டர் வெங்கடேசை தஞ்சையில் உள்ள 3வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு கார்த்திகா, வருகிற 11-ந்தேதி வரை 15 நாட்கள் வெங்கடேஷை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வெங்கடேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி கொண்டு செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications