3 நாட்களில் பொத்துக்கிட்டு ஊத்தப் போகுது வானம்.. தென் மேற்குப் பருவ மழை தொடங்குகிறது
சென்னை: தென் மேற்குப் பருவ மழை இன்னும் 3நாட்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. கொல்கத்தா அருகே உருவான இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சென்னையிலிருந்து இது 1000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் கூட சென்னையில் வெயில் வெகுவாக குறைந்து விட்டது. வானம் மூடிக் காணப்படுகிறது.

இந்த புயல் சின்னம் காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டனம், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது வலுவடைந்து வங்கதேசத்தில் கரையைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு குறைந்து விட்டது. இருப்பினும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications