டி.வி.யை ஒதுக்கவுமில்லை, காலையில் எழுந்து படித்ததும் இல்லை: முதலிடம் பெற்ற மதுரை மாணவி தீப்தி
மதுரை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவிகளில் ஒருவரான தீப்தி ஃபேஷன் டெக்னாலஜி படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் காலையில் எழுந்தது படித்ததில்லையாம்.
தமிழகத்தில் இன்று காலை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 9 மாணவிகள் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
அவ்வாறு முதலிடம் பிடித்தவர்களில் மதுரை அண்ணா நகரில் உள்ள பஸ்கோஸ் பள்ளி மாணவி தீப்தியும் அடக்கம். அவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்களும், மீதமுள்ள 3 பாடங்களில் 100க்கு 100ம் வாங்கியுள்ளார். அவரது தந்தை பாலாஜியும், தாய் மல்லீஸ்வரியும் மதுரை சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தீப்தி கூறுகையில்,
அன்றன்று நடத்தும் பாடங்களை அன்றைக்கே படித்து முடித்துவிடுவேன். படித்ததை வீட்டில் உட்கார்ந்து எழுதிப் பார்ப்பேன். சக மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பேன். பிறருக்கு சொல்லிக் கொடுக்கையில் பாடங்கள் மனதில் நன்கு பதியும். முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக டிவி, பொழுதுபோக்கை ஓரங்கட்டவில்லை. மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை படித்தேன். காலையில் எழுந்து படிக்கும் பழக்கம் இல்லை. எனக்கு ஃபேஷன் டெக்னாலஜி படிக்க ஆசை என்றார்.












Click it and Unblock the Notifications