எகிப்து: கோவில் சுவற்றில் கிறுக்கியதால் பிரச்சினையில் சிக்கி பிரபலமான சீன இளைஞன்
பீஜிங்: சுற்றுலா சென்ற இடத்தில், எகிப்தின் புராதண கோவிலில் சீன இளைஞன் ஒருவன், தான் அங்கு வருகைப் புரிந்ததை சுவற்றில் பதிவு செய்துள்ளான். இது மற்றொரு சீனப் பயணியால், இணையதளத்தில் வெளியிடப் பட்டு பரபரப்பை கிளப்பி வருகிறது.
15 வயது டிங் ஜின்ஹாவோ என்ற இளைஞன், சீனாவில் இருந்து சுற்றுலாப் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றிருந்தான். லக்சர் நகரில் இருக்கும் புராதனக் கோவில் ஒன்றை சுற்றிபார்க்கும்போது, டிங் தான் அங்கு வந்ததாக சுவர் ஒன்றில் எழுதியுள்ளான்.
மற்றொரு சீனப்பயணியின் கண்ணில் இது பட்டு விட, அவர் உடனடியாக இந்தக் காட்சியைப் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டு வேதனையும் தெரிவித்திருந்தார். ஆயிரக்கணக்கான மக்களின் கவனத்திற்கு வந்த இதன் மூலம்,. நான்சிங்கின் கிழக்குப்பகுதியில் வாழ்ந்துவரும் டிங், அடையாளம் கண்டுகொள்ளப்பட்டான். டிங்கின் இச்செயலால், நாட்டிற்கே பெரும் சங்கடம் என பலர் விமர்சனம் செய்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல பத்திரிகையாளரான சுவான் சியாங், 'வெளிநாடுகளுக்குச் செல்லும் சீன மக்கள் இவ்வாறு செய்து மற்றவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றார்கள். இது மாறுவதற்கு எத்தனை தலைமுறைகள் ஆகும்' என, வேதனைப்பட்டிருந்தார்.
பிரச்சினை பூதாகரமாக உருவெடுப்பதை உணர்ந்த டிங்கின் பெற்றோர்கள், உடனடியாக பத்திரிகை மூலம், சீன மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். அதில், 'தங்களுடைய மகன் செய்த தவறுக்கு தாங்கள் அவனை சரியாக வளர்க்காததுதான் காரணம்' என்று, அவர்கள் கூறியுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு சீனாவிலிருந்து சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், மக்களின் இத்தகைய செயல்பாடுகள் மூலம் அந்நாட்டின் மதிப்பு குறைந்து விடும் என்பது சீன மக்களின் கருத்து.
இவ்ளோ பீல் பண்றாய்ங்களே... அப்ப நம்மூரு கோவிலப் பார்த்தா என்ன ஆவாங்க?












Click it and Unblock the Notifications