பழம்பெரும் மேக்கப் உமனுக்கு வந்த கொடுமை.. சொத்துக்காக ஆள் வைத்துக் மகளே கொன்றார்!
சென்னை: பழம்பெரும் நடிகைகளுக்கு மேக்கப் உமனாக செயல்பட்டவரான கமலா தேவி என்ற வயதான பெண்ணை, சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது மகளே ஆள் வைத்துக் கொன்ற கொடுமை சென்னையில் நடந்துள்ளது.
அவரது பெயர் கமலா தேவி. 68 வயதானவர். பழைய நடிகைகளுக்கு சிகை அலங்காரம், ஒப்பனை செய்தவர். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு ஆஷா, செல்வி என இரு மகள்கள். நாகேஷ் என்ற மகன். கணவர் லட்சுமணன் இறந்து விட்டார். கமலாதேவி தனது வீட்டில் தனியாகவசித்து வந்தார்.
பிள்ளைகள் தனித் தனியாக அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதியன்று கமலா தேவி தனது வீட்டு படுக்கை அறையில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து வட பழனி போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் துப்பு துலங்காததால் கேஸ் அப்படியே கிடந்தது.
இந்தநிலையில் சமீபத்தில் இந்தக் கொலை தொடர்பான வழக்கை மீண்டும் திறந்தனர் போலீஸார். தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், கமலாதேவியின் மகள், செல்விதான், கூலிப்படையை ஏவி தனது தாயாரைக் கொன்றார் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.
தாயின் சொத்தைக் கைப்பற்ற இந்தக் காரியத்தை செய்துள்ளார் செல்வி. இதுதொடர்பாக செல்வி, கூலிப்படையினரான பிரகாஷ், சுனில் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
செல்வி ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர் ஆவார். தாயாரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறிப் போய் திருமணம் செய்தவர். மகனும், இன்னொரு மகளும் தாயாருடன் பேசுவது இல்லையாம். இதனால் தனியாகவசித்து வந்தார் கமலா தேவி.
இருப்பினும் தனது பெயரில் இருந்த ஒரு இடத்தை விற்று அதில் கிடைத்த ரூ. 50 லட்சம் பணத்தை தனது பெயரில் வங்கியில் போட்டு, அதன் வாரிசுதாரராக தனது மகள் செல்வியை போட்டிருந்தார். இதை அறிந்த செல்வி, தாயாரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் கமலா தேவி பணம் கொடுக்க மறுத்து வந்தார்.
என் பெயரில் வங்கியில் டெபாசிட் போட்டுள்ளேன். என் மறைவுக்குப் பிறகு அது உனக்குத்தான். இப்போது வராதே என்று கூறி விட்டார். இதையடுத்து தாயைக் கொலை செய்து பணத்தைக் கைப்பற்ற செல்வி திட்டமிட்டுள்ளார். அதன்படியே ஆள் வைத்துக் கொந்று விட்டார்.
அவருக்காக கொலையைச் செய்த பிரகாஷும், சுனிலும் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் ஆவர். அவர்களுக்கு ரூ. 3 லட்சம் கூலி பேசியுள்ளார் செல்வி. ஆனால் கொடுக்க பணம் இல்லாததால் தன்னிடமிருந்த 12 பவுன் நகைகளை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
சம்பவத்தன்று தனது தாயார் வீட்டுக்கு கூலிப்படையினருடன் போயுள்ளார் செல்வி. அங்கு சுனிலும், பிரகாஷும் சேர்ந்து தலையணையால் கமலாதேவியை முகத்தை அழுத்தி மூச்சுத் திணறடித்துக் கொலை செய்தனர்.
தற்போது கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications