அவதூறு வழக்கு: திருப்பூர் கோர்ட்டில் விஜயகாந்த், பிரேமலதா ஜூலை 2ல் ஆஜராக உத்தரவு

கடந்த 12-ந் தேதி திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மைதானத்தில் திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்தக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட அரசு வக்கீல் கே.என்.சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 03.06.2013 திங்கள்கிழமை வழக்கு தொடர்ந்தார்.
அதில் கடந்த மாதம் 12-ந்தேதி திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா, தே.மு.தி.க. பட்டதாரி ஆசிரியர்கள் சங்க செயலாளர் ரவீந்திரன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் கீர்த்தி சுப்பிரமணியம், மாநில பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசியதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன் வழக்கு விசாரணைக்காக விஜயகாந்த், பிரேமலதா, ரவீந்திரன், கீர்த்தி சுப்பிரமணியம், இளங்கோவன் ஆகிய 5 பேரும் ஜூலை 2ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்












Click it and Unblock the Notifications