கருணாநிதி என்றால் வியப்பு... பிரமிப்பு...உழைப்பு : தலைவர்கள் புகழாரம்
சென்னை: நேற்று மாலை, சென்னை ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் பல்வேறு தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் திமுகவினர் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு கருணாநிதியை வாழ்த்தினார்கள்.
விழாவில் பங்கேற்ற தலைவர்கள் கருணாநிதியின் பொது வாழ்க்கை, அரசியல், எழுத்து என அனைத்தையும் குறித்து பாராட்டி பேசினார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்தி பேசும்பொழுது...,
'விடுதலை பத்திரிகை சார்பில் கருணாநிதியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி ‘இந்த வயதில் தங்களால் எப்படி கடுமையாக உழைக்க முடிகிறது? ‘என்பது. அதற்கு கருணாநிதி, ‘இந்த வயது என்றால்... என்று பதிலளித்துள்ளார். இந்த பதிலை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.
எங்களுக்கு ஆட்சி பொருட்டல்ல. மகுடம் தரித்தால் மக்களுக்குதான் நல்லது. ஆட்சி இல்லா விட்டாலும் மக்களாட்சி தலைவராக இருப்பவர் கருணாநிதி. அவர் அடையா ளம் காட்டிய தளபதி பின்னால் திரள்வோம்' என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாளவன் பேசும்பொழுது...,
'கலைஞர் ஒரு வியப்பு, ஒரு பிரமிப்பு, கலைஞர் என்றால் உழைப்பு. எழுத்தில், பேச்சில் விடையளிப்பதை விட செயலில் விடையளிப்பவர் கருணாநிதி. எவ்வளவோ எதிர்ப்புகளை கண்டும் அவர் நொறுங்கி போகாமல் இருப்பது வியப்பாக உள்ளது. அவர் யாரிடமும் ஏமாற மாட்டார். தலைவர் என்றால் அவரிடமிருந்து துணிவு, அறிவு, செயல் திறத்தை கற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கு நிகரான தலைவர்கள் யாரும் இல்லை. தலைவர்கள் எல்லாம் நடிகர்களாக உள்ளனர். தங்களின் ஆற்றலை இளைஞர்களுக்கு தாருங்கள். தமிழ் ஈழத்தை, மாநில உரிமைகளை மீட்க உங்களை விட்டால் யாருமில்லை' எனக் கூறினார்.
காதர் மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) பேசியபோது...,
'வரலாற்றில் அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளேட்டோ போன்ற எத்தனையோ அறிஞர்கள் இருந்தனர். ஆனால், தமிழக வரலாற்றில் இவ்வளவு சிறந்த அறிஞர் வேறில்லை. அவரது காலத்தில் நாங்களும் இருந்தோம் என்ற பெருமை ஏற்படுகிறது. இன்றைய தமிழ் சமுதாயம் அவரின் லட்சியத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். உலக அளவில் அவரது எழுத்து நோபல் பரிசு பெறக்கூடிய அளவில் உள்ளது' என்று பாராட்டி பேசினார்.
எம்ஜிஆர் அதிமுக சார்பாக ஆர்.எம். வீரப்பன் வாழ்த்தியதாவது...,
‘இந்திய வரலாற்றிலேயே எந்த இயக்கத் தலைவருக்கும் இல்லாத வகையில் இன்றுவரை எழுதிக் கொண்டிருப்பவர். நாள் முழுவதும் பேசு கிறார். எழுதுகிறார். இடை விடாமல் உழைக்கிறார். தமிழகத் துக்கு அவல நிலை ஏற்பட்டுள்ளதே என்று இன்றும் கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறார்' என்றார்.
சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்க தமிழர் பேரவை) பேசும்போது...,
‘இந்த விழா தொண்ணூறு வயதிலும் கலைஞர் அரசியலில் இருக்கிறார் என்பதற்காக அல்ல. தொண்ணூறு வயதிலும் அரசியலை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்காகத்தான்' என்றார்.












Click it and Unblock the Notifications