செளதி அரேபியாவை தொடர்ந்து வெளிநாட்டுத் தொழிலாளர்களை வெளியேற்ற ஆரம்பித்துள்ள குவைத்!
குவைத்: குவைத் நாட்டில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு வெளியேற்ற ஆரம்பித்துள்ளது.
செளதி அரேபியாவில் நிதாகத் சட்டப்படி ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் திருப்பி அனுப்பப்பட்டு வரும் நிலையில் குவைத் அரசும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களை குவைத் அரசு அடையாளம் கண்டு முகாம்களுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வருவதாகவும் அங்கிருந்து திரும்பி வந்த தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 1 லட்சம் வெளிநாட்டு ஊழியர்களைக் குறைக்க குவைத் திட்டமிட்டுள்ளது.
குவைத்தில் சுமார் 6.5 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
குவைத் அரசின் இந்த நடவடிக்கை குறித்து அந் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் முன்கூட்டியே எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செளதி நிலைமை:
இந் நிலையில் கடந்த மே மாதம் 25ம் தேதி வரை செளதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்குத் திரும்ப 75,000 பேர் இந்தியத் தூதரத்திடம் பதிவு செய்துள்ளனர். இதில் 21,000 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.