அடேங்கப்பா.. தமிழக மாணவர் காங்கிரஸார் செய்த மோசடியைப் பாருங்கள்!
சென்னை: தமிழக மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலி்ல பெருமளவில் கள்ள ஓட்டு்ச் சீட்டை அடித்து, எமகாகத மோசடி நடந்ததால்தான் நிர்வாகிகளை கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி கூண்டோடு கலைத்து விட்டாராம்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் வாசன் கோஷ்டி, ப.சிதம்பரம் கோஷ்டிதான் இப்போதைக்கு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் வாசன் கோஷ்டியின் கையே ஓங்கியிருக்கிறது என்றாலும் கூட ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றியைப் பெற ப.சிதம்பரம் கோஷ்டியிடம் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள் வாசன் கோஷ்டியினர்.
தற்போது மாநில காங்கிரஸ் தலைவராக வாசன் கோஷ்டியைச் சேர்ந்த ஞானதேசிகன் உள்ளார். இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவரான யுவராஜாதான் இருந்தார். ஆனால் அவர் பரபரப்பான குற்றச்சாட்டில் சிக்கி பதவியை இழந்து விட்டார்.
இந்த நிலையில் தமிழக மாணவர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற்றது. மாநில தலைவர் பதவிக்கு ஜி.கே.வாசன் ஆதரவாளரான கே.கலையரசனும், ப.சிதம்பரம் ஆதரவாளரான டி.ராமநாதனும் போட்டியிட்டனர்.
இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அப்போது கடலூரில் உள்ள கல்லூரியில் படிப்பதாக கலையரசன் கொடுத்த ஆவணங்கள் போலியானது என்று ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் புகார் கொடுத்தனர். இதனால் ஓட்டு எண்ணிக்கை முடிந்த போதும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த புகார் குறித்து அகில இந்திய மாணவர் காங்கிரஸ் மேலிட தலைவர்களும், தேர்தல் பார்வையாளர்களும் விசாரணை நடத்தினர். இறுதியில் மாணவர் காங்கிரஸ் மாநில தலைவராக கலையரசன் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி மந்தன் பதக் மே 7-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
அத்தோடு, கலையரசன் மீது புகார் கொடுத்த ப.சிதம்பரம் ஆதரவாளர்களான மாநில துணைத் தலைவர் ராமநாதன், மாநில பொதுச்செயலாளர்கள் ராகுல்கிருஷ்ணா, இனியன் ராபர்ட், ஜனனி சங்கீதா, மாநிலச் செயலாளர்கள் பிரசாந்த், பர்வேஸ் அகமது சபிமுகமது செவ்வேல், தேசியப் பிரதிநிதி ஜோஸ்வா ஜெரால்டு ஆகிய 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
ஆனால், கலையரசன் கல்லூரி மாணவர் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களை வைத்து ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல்காந்திக்கு விரிவான புகார் அனுப்பினார்கள்.
இதைத் தொடர்ந்து மாணவர் காங்கிரஸ் தேர்தலில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதை அறிந்த ராகுல்காந்தி இதுபற்றி உண்மையான தகவலை விசாரித்து தரும்படி அகில இந்திய மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவரான ரோஜி ஜானுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து துப்பறியும் ஏஜென்சி மூலம் ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டாராம் ராகுல் காந்தி. அதில் பல முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.
பாயிண்ட் நம்பர் 1
கலையரசன் தேர்தலில் நிற்பதற்காகவே பாலிடெக்னிக் கல்லூரியில் அட்மிஷன் போட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாயிண்ட் நம்பர் 2
மாணவர் காங்கிரஸ் விதிப்படி படித்து கொண்டிருப்பவர் அடையாள அட்டையுடன் அங்கு ஒரு பரீட்சையாவது எழுதி இருக்க வேண்டும். ஆனால் கலையரசனுக்கு இந்த தகுதி இல்லாததால் அவர் முறைகேடாக தேர்தலில் நுழைந்ததாக விசாரணை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாயிண்ட் நம்பர் 3
கலையரசன் மீது புகார் கொடுத்த 9 நிர்வாகிகள் பற்றி விசாரணை நடத்தியதில் இவர்கள் 9 பேரும் கள்ள ஓட்டு மூலம் வெற்றி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்தல் நடந்தபோது இவர்களுக்கு பதிவான ஓட்டுச்சீட்டை பார்த்தபோது மற்ற ஓட்டு சீட்டுகளில் இருந்து 174 ஓட்டு சீட்டுகள் வித்தியாசமாக பதிவாகி இருந்தது. ஒவ்வொரு ஓட்டுச் சீட்டிலும் சென்னை என்ற முத்திரை பதிவாகி இருக்கும். ஆனால் 174 ஓட்டு சீட்டிலும் சென்னை என்ற வாசகம் சரியான இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் பதிவாகி இருந்தது. நம்பரும் வித்தியாசமாக இருந்தது.
பாயிண்ட் நம்பர் 4
இதுபற்றி துப்பறியும் தனியார் நிறுவனம் மூலம் விசாரித்ததில் குறிப்பிட்ட ஓட்டு சீட்டுகளை கள்ளத்தனமாக வெளியில் அச்சடித்து சத்தியமூர்த்தி பவனுக்கு கொண்டு வந்து ஓட்டு பெட்டியில் போட்டது அம்பலமானது. இதன் மூலம் 9 பேர் வெற்றி பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விசாரணை அறிக்கையைப் பார்த்த ராகுல் காந்தி செம டென்ஷனாகி விட்டாராம். இதனால்தான் கலையரசன் உள்ளிட்ட மொத்தப் பேரையும் கூண்டோடு நீக்கி விட்டாராம்.
கட்சிக்குள்ளேயே கள்ள ஓட்டைக் கொண்டு வந்த செயல் காங்கிரசாரிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.