25 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை… மீனவர்களை ஓட ஓட விரட்டி அட்டூழியம்
சென்னை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 785 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் 24 மீனவர்கள், மற்றும் 5 படகுகளை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்து சென்றனர். அவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மீன்பிடித்து கரை திரும்பிக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறைபிடித்து சென்றுள்ளனர். அவர்களுடன் 5 விசைப்படகுகளையும் அவர்கள் சிறைபிடித்து சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஊர்க்காவல் துறை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓட ஓட விரட்டினர்
தங்களை விரட்டியடித்த இலங்கைக் கடற்படையினர் வலைகளையும், மீன்களையும் அபகரித்துக் கொண்டதாக தப்பி வந்த மீனவர்கள் தெரிவித்தனர். கடந்த 2 நாட்களில் மட்டுமே ராமேஸ்வரம் மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.