சஸ்பென்ட் விவகாரம்: தேமுதிக எம்.எல்.ஏக்களின் மனு தள்ளுபடி
மதுரை: தமிழக சட்டசபையில் இருந்து 6 மாத காலத்துக்கு தாங்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்த்டின் மதுரை கிளை நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
சட்டசபையில் இருந்து தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், பார்த்தசாரதி, முருகேசன், கு.நல்லதம்பி, எஸ்.செந்தில்குமார், ஆர்.அருள்செல்வன் ஆகிய 6 பேர் கடந்த மார்ச் 25-ந் தேதி 6 மாத காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரே மனுவாகத் தாக்கல் செய்தனர். தங்கள் மீதான சஸ்பென்ட் நடவடிக்கை சட்டவிரோதமானது. ஆகவே, சஸ்பென்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த மனுவுக்குப் பதில் மனுத் தாக்கல் செய்த சட்டசபை செயலர், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது சரியே எனக் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இம் மனுவை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நேற்று விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தார்.அவர் தமது தீர்ப்பில், ராஜாராம் பால் என்பவரால் தொடரப்பட்ட இதேபோன்ற வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், ஏ.கே.போஸ், விஜயகாந்த் ஆகியோரால் தொடரப்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த 3 வழக்குகளின் தன்மையும், தற்போதைய வழக்கின் தன்மையும் ஒரே மாதிரியானது. இந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் எடுத்த அதே நிலையை இந்த வழக்கிலும் எடுத்து மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications