எம்.பி. சீட்டுக்காக ஜெயலலிதாவை சந்தித்தார் மாஃபா பாண்டியராஜன்: தேமுதிக கொறடா
சென்னை: மக்கள் பிரச்சினைக்காக மாஃபா பாண்டியராஜன் முதல்வரை சந்திக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி சீட்டு கேட்டுதான் அவர் முதல்ரை சந்தித்தார் என்று தேமுதிக எம்.எல்.ஏவும், அக்கட்சியின் கொறடாவுமான சந்திரகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் தேமுதிக எம்எல்ஏ பாண்டியராஜன், 12.06.2013 புதன்கிழமை ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுகவுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார் கூறியுள்ளதாவது:
முதல்வரை சந்தித்தாரே பாண்டியராஜன் அவர் கடந்த சில மாதங்களாக இரண்டு விஷயங்களை வலியுறுத்தி வந்தார். ஒன்று கட்சியில் பொருளாளர் பதவி வேண்டும் என்று வலியுறுத்தினார். இரண்டாவதாக, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன். பாராளுமன்ற தேர்தலில் சீட் கொடுக்க வேண்டும் என்று தொந்தரவு செய்து வந்தார். கடந்த வாரத்தில் இந்தப் பிரச்சனை பெரியதாக இருந்தது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாண்டியராஜனுக்கு சீட் கொடுப்பதாக ஜெயலலிதா ஒப்புக்கொண்டதாகவும், அதனால்தான் பாண்டியராஜன் ஜெயலலிதாவை சந்தித்தார் என்றும் சொல்கிறார்கள்.
விஜயகாந்த் உட்பட எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் தொகுதிப் பிரச்சனை தொடர்பாக முதல் அமைச்சரை சந்திக்க கடிதம் கொடுத்திருந்தோம். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எங்களுக்கு சந்திக்க நேரம் ஒதுக்குவது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தோம், அதற்கு அவர் நான் இந்தக் கடிதத்தை முதல் அமைச்சர் பார்வைக்கு அனுப்ப மட்டுமே முடியும் என்றார், பின்னர் நாங்கள் முதல் அமைச்சரின் செயலாளரை சந்தித்துத்தான் கடிதத்தை கொடுத்துவிட்டு வந்தோம். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
விஜயகாந்த்தான் கட்சி
5 வருடத்திற்கு முன்பு விஜயகாந்த் ஒரு எம்எல்ஏதான். அதன்பிறகு விஜயகாந்த் கட்சியோடு கூட்டணி வைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில் எங்களோடு கூட்டணி வைத்தார்கள். எங்கள் தயவால் அதிமுக வெற்றி பெற்றது.
தேமுதிக என்பது ஆலமரம் அதிலிருந்து இப்போது 7 இலைகள் மட்டுமே உதிர்ந்திருக்கின்றன அதனால் எந்த பாதிப்பும் இல்லை. விஜயகாந்த் மட்டுமே கட்சி. அவர் இருக்கின்ற வரையில் கட்சி இருக்கும். முதல் முதலிலே தேமுதிகவைச் சேர்ந்த சுந்தரராஜன் எம்எல்ஏ ஜெயலலிதாவை சந்தித்தப்போதே சொன்னேன், நான் உட்பட மீதமுள்ள 28 எம்எல்ஏக்களும் கட்சியைவிட்டுச் சென்றாலும் தேமுதிகவுக்கு துளியளவுக் கூட, இம்மியளவு கூட பாதிப்பு ஏற்படாது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications