தொகுதி மக்களின் தேவைகளுக்காகவே முதல்வரை சந்தித்தேன்… மாஃபா பாண்டியராஜன்!
சென்னை: என்னை தேர்ந்தெடுந்த தொகுதி மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த நன்மைகளையும் செய்ய முடியவில்லை. அவர்களின் தேவைகளை நிறைவேற்றக் கோரியே முதல்வரை சந்தித்தேன் என்று விருதுநகர் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. எம்.எல்.ஏ., மாஃபா பாண்டியராஜன், நேற்று (12.06.2013 புதன்கிழமை ) தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது தமது தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்கள் குறித்து மனு அளித்தார்.

அந்த மனுவில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:
1. விருதுநகரில் இராமமூர்த்தி சாலையில் இரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.
2. விருதுநகர் பாதாளசாக்கடை திட்டம் - நிறைவேற்ற உத்திரவிட வேண்டும்.
3. விருதுநகருக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றி தர வேண்டும்.
4. விருதுநகரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.
5. விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
6. விருதுநகர் நகராட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளுக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
7. விருதுநகர் நகராட்சி பூங்கா சீரமைத்துதர வேண்டும்.
7. விருதுநகர் கௌசிகா மகாநதி சீரமைக்க வேண்டும்.
8. இரண்டு மேல்நிலை தொட்டிகள் அமைத்து தர வேண்டும்.
9. விருதுநகர் நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
10. மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல்குளத்துடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.
போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன் கூறியதாவது:
பணம் சம்பாதிக்கவோ, புகழ் சம்பாதிக்கவோ, மீடியா வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலில் ஈடுபடவில்லை.
விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் எனக்கு மக்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. மக்கள் வாக்களித்து என்னை சட்டமன்றத்திற்கு, அவர்களின் பிரதிநிதியாக உரிமைகளையும், தேவைகளையும் நிறைவேற்றும்படி பணித்தார்கள்.
பல கனவுகளோடும், திட்டங்களோடும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் சேவையில் முழுமையாக ஈடுபட்டிருந்த போதிலும் என்னால் நினைத்ததைச் செய்ய முடியாத நிலை உருவானது.
என்னை நம்பி வாக்களித்த மக்களின் முன்னால், எந்தப் பணிகளையும் செய்யாமல் இயலாமையோடு நிற்பது, நான் எந்த நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்தேனோ அதையே கேள்விக்குறியாக்குகிறது. இனியும், மக்கள் பணியை சரிவர செய்ய இயலாமல் போனால், என் நோக்கத்தில் பின்னடைவு ஏற்படும்.
மக்கள் பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவே முதல்வர் அம்மா அவர்களை ஒரு சட்டமன்ற உறுப்பினராக சந்தித்தேன்.
என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த விருதுநகர் தொகுதியின் வளர்ச்சிக்கான பணிகளை பட்டியல் இட்டு முதல்வரிடம் சமர்ப்பித்தேன். தமிழகத்தை அனைத்து நிலையிலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றும் சபதமேற்றும் தொலைநோக்கோடு கடுமையாக உழைத்து வரும் முதல்வர், எனது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறார்.
தமிழக அரசை வழிநடத்தி சிறப்பான எதிர்காலம் நாட்டிற்கு அமைய உழைத்துக் கொண்டிருக்கிற முதல்வர், என்னை சந்திக்க நேரம் அளித்தமைக்கும், என் கோரிக்கைகளை கனிவன்போடு கேட்டமைக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்.
என்னையும், எனது மக்கள் பணியையும் மதிப்பீடு செய்கிற தமிழக பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் என் நன்றிகள்.
என்னுடைய கிளைகள் எங்கு வேண்டுமானாலும் பரந்து விரியலாம். அரசியல் எனது வேர் மட்டும் எப்போதும் தமிழக மக்களோடு பிணைந்திருக்கும் என்பதை இந்த நேரத்தில் மக்களுக்கு உறுதி அளிக்கிறேன் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications