வைகோ இப்படிப் பேசினால் எப்படி?... அமைச்சர் தாமோதரன் ஆதங்கம்!

இதுகுறித்து அமைச்சர் தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கை...
வைகோ தனது அறிக்கையில், 'விவசாயிகள் தங்களின் ஒரே வாழ்வாதாரமாகத் திகழ்ந்த நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலையில் விவசாயத்தை விட்டு விட்டு, மாற்று வழி தேடிச் செல்லத் தொடங்கியதன் விளைவாகத்தான் தமிழகத்தில் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் விதத்தில் குறைந்துவிட்டதாகவும், கிராமங்களில் மக்கள் தொகை மிகவும் குறைந்துவிட்டதாகவும், அதனால் நகர்ப்புறத்தில் மக்கள்தொகை பெருகி விட்டது எனவும் இதனால் விவசாயம் இன்னும் குறைந்து பெரும் உணவு பஞ்சம் ஏற்படும், கோடிக்கணக்கான விவசாயிகள் வாழ்வு பாலைவனமாகி விடும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தக் கூற்று ஏற்கத்தக்கதல்ல. இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு முதல்வர் அம்மாவின் அரசு செயல்பட்டு வருவதன் காரணமாக, தொழில் வளர்ச்சி பெருகி, கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பணி நிமித்தம் காரணமாக நகர்ப்புறங்களில் குடிபெயர்ந்து வருகின்றனர். இது தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
அதே சமயத்தில், இதன் காரணமாக, விவசாயம் குறைந்து உணவுப் பஞ்சம் ஏற்படும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முதல்வர் அம்மா எடுத்துள்ளார்கள் என்பதையும், வைகோவுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். எனவே, தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் என்ற கற்பனை வாதத்தை வைகோ கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
விரல்விட்டு எண்ண முடியாத அளவில், லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு முதல்வர் அம்மா நிவாரணம் வழங்கியுள்ள நிலையில், விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்துள்ளது என்ற வைகோவின் வாதம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.
இந்தியாவிலேயே வறட்சிக்கு நிவாரணம் தந்த ஒரே முதலமைச்சர் தமிழ்நாடு முதல்வர் அம்மா தான் என்பதை இந்தத் தருணத்தில் வைகோவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளையும் தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சேர்ப்பதற்காக, விவசாயிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தையும் அரசே செலுத்தியது. டெல்டா மாவட்டங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசூல் பாதித்த 3.61 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15,000/- ரூபாய் வீதம், 3 லட்சத்து 52 ஆயிரத்து 613 விவசாயிகளுக்கு 524.25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
டெல்டா அல்லாத மாவட்டங்களைப் பொறுத்தவரையில், 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நெற் பயிருக்கு ஏக்கருக்கு 5,000 ரூபாயும், பாசன ஆதார முள்ள நிலங்களில் இதர பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4,000 ரூபாயும், பாசன ஆதாரமற்ற நிலங்களில் பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 3,000 ரூபாயும், தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு 4,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 16.03 லட்சம் விவசாயிகள் இது வரை பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணமாக 756.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, பயிர் காப்பீடு செய்த விவசாயிகள், பயிர் காப்பீட்டுத் தொகையினையும் பெறுவர். வறட்சிப் பணிகளுக்காக மொத்தத்தில் 3,881 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, மனம் போன போக்கில் அரசியல் அனுபவம் மிக்க வைகோ பேசுவது அழகல்ல. பயிர் எடுப்புக் கணக்கைப் பொறுத்தவரையில், கிராம நிர்வாக அதிகாரிகளும், வேளாண்மைத்துறை அலுவலர்களும் இணைந்து ஒவ்வொரு கிராமத்திலும் ஆய்வு செய்து, 50 விழுக்காட்டிற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ள பயிர்களை எவ்வித விடுதலுமின்றி கணக்கெடுத்துள்ளனர். எனவே, இதில் பயிர் எடுப்புக் கணக்கு முறையாக செய்யப்படவில்லை என்ற வாதமே விதண்டாவாதம் என்பதை வைகோவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
புள்ளி விவரங்களுடன் கருத்தைத் தெரிவிக்கும் வைகோ, வறட்சி நிவாரணம் வழங்கிய விஷயத்தில் எவ்வித புள்ளி விவரத்தையும் சுட்டிக் காட்டாமல், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசியிருப்பது விரக்தியின் விளிம்பில் அவர் இருப்பதை தெளிவாக்குகிறது. இனி வருங்காலங்களில், உண்மை நிலையை உணர்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவரை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications