உ.பி.: பஞ்சாயத்தில் இளம்பெண்ணை எரித்துக் கொன்ற காதலன் குடும்பத்தார்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் காதல் விவகாரம் தொடர்பாக காதலனின் குடும்பத்தாரால் இளம்பெண் ஒருவர் ஊர் பஞ்சாயத்தில் பலர் முன்பு தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் காராகோல் கிராமத்தைச் சேர்ந்தவர் கியான்வதி. அவர் மகள் மஞ்சு அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெய்ஹிந்த் என்பவரின் மகன் ரஞ்சித்தை காதலித்துள்ளார். இந்த காதலை ரஞ்சித்தின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர்.
பஞ்சாயத்து கூட்டத்திற்கு வந்த கியான்வதி மஞ்சுவும், ரஞ்சித்தும் காதலிப்பதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ஜெய்ஹிந்த் மற்றும் அவரது குடும்பத்தார் ஆத்திரமடைந்து கியான்வதியை அடி நொறுக்கிவிட்டனர். தாயை காக்க வந்த மஞ்சு மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்.
இதில் படுகாயம் அடைந்த மஞ்சு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications