ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவும் குதிக்கிறது? வேட்பு மனு வாங்கியதால் பரபரப்பு!!

தமிழகத்தில் 6 காலியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுகவால் 5 வேட்பாளர்களை தேர்வு செய்து விட முடியும். 6வது இடத்திற்கு திமுகவா அல்லது தேமுதிகவா என்று பரபரப்பு நிலவி வருகிறது.அதையும் கைப்பற்ற அதிமுக முயல்வதாகவும் பேச்சு உள்ளது.
6வது இடத்தில் போட்டியிட திமுகவுக்கும், தேமுதிகவுக்கும் தனிப் பெரும் பலம் இல்லை. இருவரும் இணைந்து, காங்கிரஸ் உள்ளிட்ட குட்டிக் கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் அந்த இடத்தி்ல் ஒருவர் வெல்ல வாய்ப்புண்டு.
ஆனால் திமுகவோ, தேமுதிகவோ கூட்டணி அமைப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. இந்த நிலையில் திமுக சார்பில் கனிமொழி இன்று திடீரென வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதேசமயம், தேமுதிகவும் வேட்பு மனுவை வாங்கியுள்ளது. அக்கட்சியின் கொறடா வி.சி.சந்திரகுமார் வேட்பு மனுவை வாங்கியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 6வது இடத்துக்கு திமுக வேட்பாளர் கனிமொழியுடன் தேமுதிகவின் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தேர்தல் நடைபெற வேண்டிய சூழல் உருவாகும். தேமுதிக சார்பில் யாரை களம் இறக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications