தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் பதவியிலிருந்து ஷரத் யாதவ் விலகல்

பாட்னாவில் நிதீஷ் குமாருடன் இணைந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது இதை அறிவித்தார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதற்கான காரணங்களையும் அவர் விலக்கினார்.
யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரது முயற்சியில் உருவான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடந்த 17 வருடமாக நீடித்திருந்தோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வரைமுறைக்குள் இத்தனை காலமாக இருந்தோம். ஆனால் கடந்த 6-7 மாதமாக நிலைமை மாறி விட்டது.
பீகாரில் கடந்த 7 வருடமாக நல்ல ஒத்துழைப்புடன் இருந்துவந்தோம். பாஜகவுக்கு நல்ல ஒத்துழைப்பையும் கொடுத்து வந்தோம்.
கோவா மாநாடு நடந்தபோது கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வரைமுறையை மீறாமல் பார்த்துக் கொள்ளுமாறு பாஜகவை வலியுறுத்தியிருந்தோம்.
ஆனால் இப்போது நாங்கள் கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இது மிகவும் கடினமான ஒன்று. எந்தக் கூட்டணியாக இருந்தாலும் பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் தோழமை இருக்க வேண்டும். அதைத்தான் நாங்களும் இத்தனை காலமாக முயற்சித்து வந்தோம். கடைப்பிடித்து வந்தோம்.
ஆனால் ராமர் கோவில் எங்களது இலக்கு, கொள்கை என்று சிலர் பேசத் தொடங்கியபோது இந்த தோழமையும், நம்பிக்கையும் கேள்விக்குறியாகி விடுகிறது. இது மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி விட்டது. இதை நாங்கள் அமைதியாகவேடிக்கை பார்க்க முடியாது.
எங்களுக்கு தலைவர்கள் குறித்தோ, பிறர் குறித்தோ கவலையில்லை. ஆனால் கொள்கைதான் அச்சுறுத்தலாக உள்ளது. பேச்சுக்கள் பயமுறுத்துகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதாதளம் வெளியேறியுள்ளது. நான் அமைப்பாளர் பொறுப்பிலிருந்து விலகி விட்டேன் என்றார் யாதவ்.












Click it and Unblock the Notifications