இந்தியா சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார் என்.சீனிவாசன்!
லண்டனில் வரும் 25-ந் தேதி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளில் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ் முறை பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த டி.ஆர்.எஸ். முறைக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக என்.சீனிவாசன் கலந்து கொள்கிறார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக என்.சீனிவாசன் பதவியில் இருந்தார். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் பிக்ஸிங் விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கியதால் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை சீனிவாசன் ஒதுங்கி இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அவருக்குப் பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பொறுப்புகளை ஜக்மோகன் டால்மியா நிர்வகித்து வருகிறார். ஆனால் தற்போது லண்டனில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்துக்கு இந்தியாவின் பிரதிநிதியாக என்.சீனிவாசனே செல்ல இருக்கிறார். அவர் டி.ஆர்.எஸ். முறைக்கான இந்தியாவின் எதிர்ப்பைப் பதிவு செய்ய இருக்கிறார்.
இதனிடையே நாளை சீனிவாசனை ஜக்மோகன் டால்மியா உள்ளிட்ட மூன்று புதிய நிர்வாகிகள் சந்திக்க இருக்கின்றனர். இவர்கள் மூவருமே சீனிவாசனின் லண்டன் பயணத்தை எதிர்க்கமாட்டார்கள் என்றே தெரிகிறது.