வட இந்தியாவில் ஒரே வெள்ளமா இருக்கு, சூதானமா இருங்க: அமெரிக்கர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை
டெல்லி: வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கிருக்கும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியிருப்பதாவது,
உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் ஹரியானாவில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிப்பதாகவும், தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளிலும், ஆங்காங்கே சிக்கித் தவிப்பவர்களை காப்பாற்றும் பணியிலும் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் வடியும்வரை, உள்கட்டமைப்பு வசதிகள் சரிசெய்யப்படும் வரை தேவையில்லாமல் எந்த ஒரு அமெரிக்க குடிமகனும் அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
வெள்ள நிலவரம் குறித்து அறிய உள்ளூர் ஊடகங்களை பார்க்கவும். இதுவரை எந்த ஒரு அமெரிக்க குடிமகனும் இறந்ததாக தகவல் இல்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்ற இந்திய அதிகாரிகளுடன் சேர்ந்து முயற்சித்து வருகிறோம். உத்தரகண்டில் யாராவது அமெரிக்க குடிமகன் சிக்கியிருந்தால் உடனே அமெரிக்க தூதரகத்தை 011-2419-8000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது [email protected] என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications