கேரளா: பேருந்தில் மாணவர்களை ஏற்ற மறுத்த கண்டக்டருக்கு நூதன தண்டனை
திருச்சூர்: பள்ளி மாணவர்களை பேருந்தில் ஏற்ற மறுத்த கண்டக்டரை 200 முறை இம்போசிசன் எழுதவைத்து தண்டனை கொடுத்துள்ளனர் கேரளா போலீசார். ‘இனி மேல் மாணவர்களை பஸ்சில் ஏறுவதை தடுக்கமாட்டேன்' என 200 முறை கை ஒடிய எழுதியுள்ளார் கண்டக்டர்.
திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம்-வடக்காஞ்சேரி இடையே இயக்கப்படும் பி.வி.டி. தனியார் பஸ்சின் ஊழியர்கள் மீது மாணவர்கள் புகார் பெட்டியில் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில் பி.டி.வி., என்ற தனியார் பஸ் சாத்தக்குளம் பஸ்டாப்பில் மாணவர்களை பஸ்சில் ஏற்றிச்செல்ல மறுக்கின்றனர்; ஆனால், பிற பயணிகளை மட்டும் அனுமதிக்கின்றனர். தட்டிக்கேட்டால் மிரட்டுகின்றனர்; தினசரி இதேபோல் தான் நடந்து கொள்கின்றனர் என புகார் கூறியிருந்தனர். இதையடுத்து, எஸ்.ஐ., கிரிஜா வல்லபன் தலைமையில் வந்த போலீசார் தனியார் பஸ் கண்டக்டர் சுரேசை என்பவரை பள்ளிக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள கலையரங்கில் அமரவைத்து மாணவர்கள் முன்னிலையில், 'இனி மேல் மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்கமாட்டேன்' என்று 200 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர். இதைப்பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கேரளாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர்களுக்காக போலீசார் புகார் பெட்டி வைத்துள்ளனர். பள்ளி வாகனத்திலோ, பள்ளியிலோ நடக்கும் ராக்கிங், மன நிலை பாதிப்பு, பள்ளியின் அருகில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் ரகசிய விற்பனை மற்றும் மாணவர்களின் வீட்டில் உள்ள அசாதாரண சூழல் குறித்தும் 'புகார்ப்பெட்டி'யில் மனுவாக அளிக்கலாம். இவ்வாறு புகார் அளிக்கும் மாணவர் பெயர் ரகசியமாக வைக்கப்படும்; இதன் பின், போலீசார் ரகசிய விசாரணை நடத்தி உடனடியாக தீர்வு காண்கின்றனர்.
தமிழ்நாட்டிலும் இதனை நடைமுறைப்படுத்தினால் மாணவர்களை பேருந்தில் ஏற்ற மறுக்கும் பல ஓட்டுனர்கள், நடத்துநர்கள் சிக்குவார்கள். மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் எளிதில் தீர்க்கலாம் அரசு நடவடிக்கை எடுக்குமா?