ரூ25 லட்சம் வெள்ள நிவாரண நிதி.. காங்கிரஸை முன்னுதாரணம் காட்டி கருணாநிதி அறிக்கை
சென்னை: உத்தர்காண்ட் மாநிலத்துக்கான பிரதமர் வெள்ள நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ25 லட்சம் வழங்கப்படும் என்றும் திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவர் என்றும் அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு தமிழகத்திலிருந்து சென்ற சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, அவர்களைப் பாதுகாப்பாக தமிழகத்திற்கு மீண்டும் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்று கடந்த 19-6-2013 அன்று மத்திய, மாநில அரசுகளுக்கு நான் வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில், நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர். பாலு மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கெலிகாப்டர் உதவியோடு அந்தப் பயணிகள் பத்திரமாக தமிழகத்திற்கு வந்து சேர்வதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டவாறு, மத்திய, மாநில அரசுகளின் உதவியினால் அந்தப் பயணிகள் எல்லாம் தற்போது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி மனதிற்கு ஆறுதலாக உள்ளது.

பிரதமர் வேண்டுகோள்
இதற்கிடையே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி ஒதுக்கியுள்ள நிலையில் பிரதமர் நேற்றைய தினம் விடுத்த அறிக்கையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிய வேண்டும், இந்திய நாட்டு மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிவாரண நிதியை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சோனியா அறிக்கை
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள அறிக்கையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கின்றார்.

திமுகவும் வெள்ள நிவாரண நிதி
இந்த நிலையில், மழை வெள்ளத்திலும், மண் சரிவிலும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசினால் திரட்டப்படும் நிவாரண நிதிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இருபத்தைந்து இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இது தவிர தி.மு. கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்காக வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications