கார் ஏற்றி கொன்ற வழக்கு: சல்மானின் மனு தள்ளுபடி

கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது சல்மான் கானின் கார் ஏறியதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர். வேகமாகவும், அலட்சியமாகவும் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சல்மான் கான் மரணம் ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டியதாக போலீசார் நீதிமன்றத்தில் ஆதாரம் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கை மறு விசாரணை செய்ய மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சல்மான் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு மீதான விசாரணை மே மாதம் முடிந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் சல்மான் கானின் மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மீதான வழக்கு மறுவிசாரணை செய்யப்படுவதுடன், அவர் மீது கொலை குற்றம் சுமத்தப்படுகிறது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications