10 டி.எம்.சி. காவிரி நீரை உடனே கர்நாடகம் தரக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு!

மேலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
தமிழகத்தின் மேட்டூர் அணையில் கடந்த 24 ஆண்டுகாலம் இல்லாத வகையில் நீர் அளவு குறைந்து காணப்படுகிறது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை, ஹேமாவதி நிரம்பி வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
இந் நிலையில் தமிழக அரசின் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒரு மனுவில் கர்நாடக அரசு எந்த உத்தரவையும் செயல்படுத்துவதில்லை. காவிரி நதி நீர் பிரச்சனையில் இடைக்கால தீர்ப்பு மற்றும் இறுதி தீர்ப்புகள் வெளியாகி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பின்பும் இது தொடர்பான எந்த உத்தரவையும் கர்நாடகா செயல்படுத்தவில்லை.
காவிரி நதியில் தமிழக அரசுக்கு சேர வேண்டிய உரிய நீரை திறந்து விடுவதில்லை. கடந்த ஆண்டு தர வேண்டிய 53.8 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடவில்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் திறக்கப்பட வேண்டிய தண்ணீரையும் திறந்து விடவில்லை.
இந்த நிலை நீடித்தால் தமிழக விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாகிவிடும். எனவே கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளை கையகப்படுத்தி நடுநிலையான ஆணையம் ஒன்றை அமைத்து அணைகளிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரை திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மேலும் தற்போது அமைக்கப்பட்ட காவிரி மேற்பார்வை குழுவின் உத்தரவையும் கர்நாடகா செயல்படுத்தவில்லை. எனவே காவிரி நதி நீர் மேம்பாட்டு ஆணையத்தையும் முறைப்படுத்தும் குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும். அதுவரையிலும் இந்த நடுநிலை ஆணையம் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது மனு...
அதே போல தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2வது மனு கர்நாடக அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்காகும்.
அதில், கர்நாடக மாநிலத்தின் ஆலோசனைப்படி தான் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கிணங்க காவிரி நதிநீர் மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் உத்தரவையும் செயல்படுத்தாமல் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை மதிக்காத வகையில் இருப்பதால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கர்நாடகத்தில் பெய்து வரும் கன மழையால் கபினி அணை நிரம்பி வருவதால் உபரி நீர் இன்று முதல் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications