என்.எல்.சியில் ஜூலை 3ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக முடிவெடுத்துள்ளன.
என்.எல்.சி. நிறுவனத்தின் 5%^ பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் நேற்று மாலை என்.எல்.சி.யின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. இக்கூட்டத்தில் பல கட்ட போராட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டிருக்கின்றன.
வரும் 27-ந் தேதி முதல் தொழிலாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம், 28,29-ந் தேதிகளில் கோரிக்கைகளை விளக்கி வாயிற்கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. ஜூலை 1-ந் தேதி ஆர்ப்பாட்டம், 2-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஜூலை 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 17 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. என்.எல்.சி.யின் நிரந்தர தொழிலாளர்கள் 14 ஆயிரம் பேர், ஒப்பந்த தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் மற்றும் பொறியாளர்கள், அலுவலகர்கள் 4500 பேர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் மின் உற்பத்தியானது கடுமையாக பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications