உத்தரகண்டில் வெள்ளத்தில் சிக்கிய 2,000 பேரை செல்போன் உதவியால் காப்பாற்றிய வாலிபர்
டேராடூன்: உத்தரகண்டில் ஒரு வாலிபர் தனது செல்போன் மூலம் 2,000 பேரை காப்பாற்றியுள்ளார்.
இன்றைய வாலிபர்கள் எப்பொழுது பார்த்தாலும் செல்போனும் கையுமாக இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் பெற்றோர்கள் அந்த செல்போனில் என்னதான் இருக்குமோ 24 மணிநேரமும் நோண்டிக்கிட்டே இருக்கான் என்று திட்டுவார்கள். இந்நிலையில் ஒரு வாலிபர் தனது செல்போன் மூலம் 2,000 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஜங்கிள் சாட்டி என்ற பகுதியில் 2,000 பேர் சிக்கிக் கொண்டனர். அப்போது வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் தங்களை மீட்க யாராவது வரமாட்டார்களா என்று காத்திருந்தனர்.
அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஜெயேஷ் என்ற வாலிபர் தாங்கள் சிக்கிய பகுதியை ஒரு பேப்பரில் வரைந்து அதை தனது செல்போனில் போட்டோ எடுத்து அதை தனது நண்பருக்கு அனுப்பி வைத்தார்.

அந்த போட்டோவை அவரது நண்பர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை ஐ.ஜி.யிடம் காண்பித்தார். அந்த படத்தை வைத்து மீட்பு படையினர் அப்பகுதிக்கு சென்று அங்கு சிக்கியிருந்தவர்களை மீட்டனர். ஜெயேஷின் சமயோஜித புத்தியை மீட்பு பணியினர் பாராட்டினர்.













Click it and Unblock the Notifications