இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு: மின்சாரத்தின் விலை உயரும்!

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
இயற்கை எரிவாயு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. உள்நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி கணிசமான அளவுக்கு குறைந்து விட்டதால் விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகி விட்டது.
உள்நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி குறைந்து கொண்டே இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டியதுள்ளது. உள்நாட்டு இயற்கை எரிவாயுத் துறையில் மீது இதுவரை எந்த முதலீடும் செய்யப்படவில்லை. இனி முதலீடு செய்ய உள்ளோம். இதனால் உள்நாட்டிலேயே இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரிக்கும்.
இயற்கை எரிவாயு மீதான புதிய விலை 2014ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். இயற்கை எரிவாயு விலையை உயர்த்த யாரும் எங்களை நிர்ப்பந்தப்படுத்தவில்லை. பொருளாதார சீர்திருத்தத்தை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் நலனை கருத்தில் கொண்டு அரசு இதில் செயல்படவில்லை.
லட்சத்தீவுக்கு ஹெலிகாப்டர்களை இயக்க மானிய உதவி செய்வது அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் 3-வது மெட்ரோ ரெயில் பாதை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.23,136 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளை கண்காணித்து ஒழுங்குபடுத்த நிலக்கரி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை நிர்வாகிக்காது. நிலக்கரி சுரங்க விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கோல் இந்தியா நிறுவனம் பெற்றிருக்கும். நிலக்கரி ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சுயாட்சி அமைப்பாக செயல்படும் என்றார்.
மின்சாரத்தின் விலை உயரும்-அன்புமணி:
இந் நிலையில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இயற்கை எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதால் எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.4.70 வரை உயரும். மேலும் யூரியா உள்ளிட்ட உரங்களின் விலைகளும், வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலையும் கடுமையாக அதிகரிக்கக் கூடும்.
எரிவாயு விலை உயர்வால் ஏற்படும் மின்சாரக் கட்டண உயர்வும் மக்கள் மீது தான் திணிக்கப்படும். இதனால் மின் கட்டணம் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகரிக்கும் ஆபத்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு போராட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
சீமானும் எதிர்ப்பு:
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை இரட்டிப்பாக உயர்த்திக்கொள்ள மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு எடுத்துள்ள முடிவு, விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களின் விலைகளையும், மின்சார கட்டணத்தையும் கடுமையாக உயர வழிவகுத்துள்ளது.
இயற்கை எரிவாயுவிற்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் விலை, ஒரு பிரிட்டிஷ் தர்மல் யூனிட்டிற்கு 4.1 டாலர்களாகும். இதனை இரட்டிப்பாக்கி, அதாவது யூனிட்டிற்கு 8.2 டாலர் என்று உயர்த்திக்கொள்ள மத்திய அமைச்சரவைக் குழு அனுமதியளித்துள்ளது.
இதனால், உரம் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு ஆண்டிற்கு ரூ.9,000 கோடி கூடுதலாக செலவாகும். தமிழ்நாட்டிலும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவைகள் தயாரித்து தமிழக அரசுக்கு அளிக்கும் மின்சாரத்தின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின் கட்டணம் உயரும்.
விவசாயத்தில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்றும், நமது நாட்டில்தான் தொலைபேசி, அலைபேசி கட்டணங்கள் குறைவாக இருக்கிறது என்றும் பேசிவரும் பிரதமர், நமது நாட்டு மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் பொருளாதார முடிவுகளை கொஞ்சமும் தயக்கமின்றி எடுத்து வருவது, அவரது தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு மக்கள் நலனில் துளியும் அக்கறையற்றது என்பதையே காட்டுகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications