எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்க மத்திய அரசு அனுமதிப்பதா?: வைகோ கண்டனம்
சென்னை: எண்ணெய் நிறுவனங்கள் கோடி கோடியாகக் கொள்ளை லாபம் சம்பாதிக்க மத்திய அரசு அனுமதித்துவிட்டு பொதுமக்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்டிருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசினுடைய தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ரூபாயின் மதிப்பும் குறைந்து மிகக் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அனைத்துப் பண்டங்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. நடுத்தர மக்களும், மாத ஊதியம் வாங்குவோரும், அடித்தட்டு மக்களும், தினக்கூலி வாழ்வு நடத்தும் ஏழைகளும் இந்த விலைவாசி உயர்வால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோலின் விலை ஜூன் ஒன்றாம் தேதி லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டது. ஜூன் 15-ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஜூன் 28-ஆம் தேதி மூன்றாவது முறையாக லிட்டருக்கு ரூ.1.82 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இதில் விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரியைச் சேர்க்கும்போது விலை இன்னும் அதிகமாகும். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.71-க்கு விற்கப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கான ரூபாய் மதிப்பு குறைந்ததுதான் காரணம் என்பதை ஏற்க முடியாது. அந்த மதிப்பு கூடுவதும் குறைவதும் சராசரியாக நடக்கக் கூடியதுதான். எண்ணெய் நிறுவனங்கள் கோடி கோடியாகக் கொள்ளை லாபம் சம்பாதிக்க மத்திய அரசு அனுமதித்துவிட்டு பொதுமக்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்டிருக்கிறது.
மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு பெட்ரோல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications