உத்தர்காண்ட் வெள்ளம்.. உக்கிரமாக ட்விட்டரில் மோதும் காங்கிரஸ், பாஜக தலைவர்கள்!
டெல்லி: உத்தர்காண்ட் வெள்ள பாதிப்பு விவகாரம் இப்போது ட்விட்டரில் பெரும் சண்டையாகவே உருவெடுத்திருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் காட்டமாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
உத்தர்காண்ட் வெள்ளத்தில் பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட வேண்டியது இருக்கிறது என்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுஒருபுறம் இருக்க இந்த விவகாரமே ஒரு அரசியல் சர்ச்சையாகவும் உருமாறியிருக்கிறது.

மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி தமது ட்விட்டர் பக்கத்தில், பேரழிவால் பாதிக்கப்பட்ட உத்தர்காண்ட் பகுதிகளை பார்வையிடாத கட்சியினர் காங்கிரஸ் தலைவர்களை குறை கூறுகின்றனர். சிபிஐக்கு கூடுதல் சுதந்திரம் கொடுப்பது தொடர்பான அரசின் பரிந்துரைகளை விமர்சிக்க நேரம் கிடைக்கிறது.. ஆனால் உத்தர்காண்ட் போகமுடியவில்லையோ என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பாஜக மூத்த தலைவரான சுஷ்மா ஸ்வாராஜோ, நாங்கள் உத்தர்காண்ட் போகவில்லைதான். ஏனெனில் உள்துறை அமைச்சர்தான் நாங்கள் அங்கு சென்றால் மீட்பு பணிகள் பாதிக்கும் என்று கூறியிருந்தார். அவர் உட்பட எவருமே எங்கும் இறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரம் பற்றி ஜூன் 18-ந் தேதியே உள்துறை அமைச்சரிடமும் பேசி இருக்கிறேன்.. ட்விட்டரிலும் பதிவு போட்டிருக்கிறேன் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
அத்துடன் உங்கள் மாநில அரசு என்ன செய்தது? ஒன்றுமே செய்யவில்லை. அனைத்துமே ராணுவம் செய்தது. அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு எனது வணக்கங்கள். பட்டினியால் மக்கள் வாடுகின்றனர். இறந்தவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்படுகிறது என்று காட்டம் காட்டியிருக்கிறார்.
இதற்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கானும் ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார். உத்தர்காண்ட்டில் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.. இயற்கை சீற்றத்தை அரசியலாக்கிவிடாதீர்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
அக்கப்போர் என்பது இதுதானோ!












Click it and Unblock the Notifications