பெண் எஸ்ஐ. புகாரின் பேரில் மாஜிஸ்திரேட்டைக் கைது செய்வதா.. வக்கீல்கள் நாளை ஸ்டிரைக்

குன்னூர் மாஜிஸ்திரேட் தங்கராஜ் தன்னை காதலித்து, குடும்பம் நடத்தி தற்போது மோசடி செய்து விட்டதாக கூறி பெண் சப் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தங்கராஜ் கைது செய்யப்பட்டார். சிறையிலும் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் விடுதலையாகி விட்டார்.
வக்கீலாக இருந்தபோது தன்னைக் காதலித்த தங்கராஜ், மாஜிஸ்திரேட்டாக ஆன பின்னர் தன்னைப் புறக்கணித்ததாகவும், தன்னுடன் இன்பமாக இருந்ததை மறந்து விட்டு மிரட்டுவதாகவும் குமுறலுடன் கூறியிருந்தார் உமா மகேஸ்வரி.
இந்த நிலையில் தங்கராஜை கைது செய்ததற்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவர் பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஸ்குமார் அகர்வால் முன்பு இன்று ஆஜராகி சில கருத்துக்களை கூறினார்.
அவர் கூறுகையில்,
போலீஸ் டி.ஜி.பி. மீது வக்கீல்கள் புகார் கொடுத்த பிறகு வக்கீல்கள் கைது செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இதுவரை 6 வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாஜிஸ் திரேட்டை கைது செய்து விலங்கிட்டு அழைத்து சென்றுள்ளனர். இது சுப்ரீம் கோர்ட்டு வகுத்து கொடுத்துள்ள நடைமுறைக்கு எதிரானது.
குஜராத் அரசுக்கு எதிராக வக்கீல்கள் தொடர்ந்த வழக்கில் மாஜிஸ்திரேட் உள்பட சிலரை கைது செய்வதில் சில நடைமுறைகளை சுப்ரீம் கோர்ட் தெளிவாக வகுத்து கொடுத்துள்ளது. அதை போலீசார் மீறி உள்ளனர். இது நீதித்துறை மீது நடத்தும் தாக்குதல். ஏற்கனவே இதுபற்றி முறையிட்டுள்ளேன். வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க ரகசிய கூட்டம் போட்டு போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
இந்த விசயத்தை கிடப்பில் போடாமல் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார்.
தற்போது இந்த சம்பவத்தைக் கண்டித்து நாளை சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications