கையாலாகாத மத்திய அரசு தனது திறமையின்மையை சாதாரண மக்களின் மீது திணிப்பதா?: ஜெயலலிதா காட்டம்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த கையாலாகாத மத்திய அரசு தனது திறமையின்மையை சாதாரண மக்களின் மீது திணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று டீசல் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

17.01.2013 அன்று நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் டீசல் விலையினை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்ட போதே, அதனை நான் ஒரு அறிக்கை வாயிலாகக் கண்டித்தேன்.

இந்த முடிவு டீசல் விலை ஏற்றத்திற்குத் தான் வழிவகுக்குமே அல்லாமல், ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு வழிவகுக்காது என்றும், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது உயர்த்திக் கொண்டு வரும் நிலை தான் டீசலுக்கும் இனி ஏற்படும் என்றும் எச்சரித்து, ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, டீசல் விலையினை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற கொள்கை முடிவினை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினேன்.

மாதாமாதம் டீசல் விலையை உயர்த்தி வரும் எண்ணெய் நிறுவனங்கள், நள்ளிரவு முதல் டீசல் விலையை மேலும் லிட்டருக்கு 50 காசுகள் என்ற வீதத்தில் உயர்த்தியுள்ளன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் விலை ஆகியவற்றைக் காரணம் காட்டி, டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

மாதாமாதம் இவ்வாறு டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்துவது, "தேளுக்கு இடம் கொடுத்தால், ஜாமத்துக்கு ஜாமம் கொட்டும்" என்ற பழமொழியைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகிறது.

இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, அதன் காரணமாக வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கும் ஏழை எளிய நடுத்தர மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்குவதாகவே இந்த விலை உயர்வு அமையும்.

இந்திய ரூபாயின் வீழ்ச்சி என்பது, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, நிதிக் கொள்கை, ஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கை ஆகிய பல்வேறு காரணங்களால் ஏற்பட்டது ஆகும். இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த கையாலாகாத மத்திய அரசு தனது திறமையின்மையை சாதாரண மக்களின் மீது திணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.

அரசின் திறமையின்மையை எல்லாம் பொதுமக்கள் மீது திணிப்பது என்பது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பொதுமக்களின் உணர்வுகளுக்கு சற்றும் மதிப்பளிக்காமல், பொதுமக்களிடமிருந்து வெகு தூரம் விலகிச் சென்றுவிட்டதையே காட்டுகிறது.

இந்த டீசல் விலை உயர்வு வாகனக் கட்டணங்கள், அனைத்துப் பொருட்களின் விலைகள் ஆகியவை உயர வழிவகுக்கும். இதன் காரணமாக, விலைவாசி மேலும் உயரும். சாமானிய மக்களுக்கு பெரும் துன்பத்தை விளைவிக்கும். எனவே, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, இந்த டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+