மழை வேண்டி யாகம் செய்வதை நிறுத்துங்கள்.. அறநிலையத்துறைக்கு வீரமணி கோரிக்கை

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை....
இந்த ஆண்டு, பருவ மழை போதிய அளவு இல்லை என்பதால் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில், மழையை வரவழைக்க இந்து அறநிலையத்துறை, தன்கீழ் உள்ள கோவில்களில் யாகம் நடத்தியும், வருண ஜெபம் நடத்தியும், சில கோயில் குளங்களில் முழங்கால் அளவு, அரை நிர்வாணக் கோலத்துடன் பூணூலைக் காட்டிக் கொண்டு, வேத மந்திரங்களை கூவிக் கொண்டு, யாகம் என்ற பெயரில் புது வருவாய்க்கு வழிதேடும் வழியை வகுத்துக் கொடுத்திருக்கிறது.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் மழை வேண்டி யாகம் என்றால், உலகத்தின் பகுத்தறிவுள்ள மக்கள் கை கொட்டிச் சிரிக்க மாட்டார்களா?
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை கொள்கைக்கும், அடிப்படை கடமைகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், "ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை, கேள்வி கேட்கும் அறிவை, மனித நேயத்தை, சீர்திருத்தத்தைப் பரப்புவது அடிப்படை கடமை" என்று இருக்கும்போது, அதை செய்யத் தவறுவதைவிட பெருங்குற்றமும் உண்டோ?
அரசு துறையே அறிவியல் மனப்போக்குக்கும், சீர்திருத்தத்திற்கும் முரணாக இப்படி மழை வேண்டி யாகம் செய்ய அதன் நிதியைச் செலவிட்டு, மூடநம்பிக்கையைப் பரப்பும் மோசமான எதிர்மறை செயலில் ஈடுபடலாமா?
மழை எப்படி வருகிறது என்பது 4, 5ஆவது வகுப்பு மாணவனுக்கு விஞ்ஞானம் சொல்லிக் கொடுத்துவிட்டு, இப்படி ‘யாகம்' செய்தால் அது ‘இரட்டை வேடம்' அல்லவா? யாகம் நடத்தும் யாராவது கையில் குடையோடு சென்றுள்ளார்களா? உத்தரவாதம் தருவார்களா?
மழை வேண்டி வருண ஜெபம், யாகம், முழங்கால் தண்ணீரில் நின்று மந்திரங்கள், அல்லது அமிர்தவர்ஷணி ராகம் பாடுவதாலோ, ‘ஆனந்த பைரவி' வாசிப்பதாலோ மழை வரும் என்றால், கச்சேரி மூலமே மழைப் பிரச்சினையைத் தீர்த்து விடலாமே. ஏன் காவிரி நீருக்காக உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்?
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வகையில் மீண்டும் மிரட்டும் மழையைத் தடுக்க என்ன யாகம்? என்ன பூஜை? என்ன ஜெபம்? என்று சொல்லட்டுமே.
அறியாமையை விட மிகப் பெரிய நோய் மனித குலத்திற்கு வேறு இல்லை என்றார் அமெரிக்க நாட்டுப் பகுத்தறிவாளர் ராபர்ட் ஜி. இங்கர்சால். இந்த அறியாமையைத் தமிழக அரசே ஊக்குவிக்கலாமா? பரப்பலாமா? அதுவும் அண்ணா பெயரில் உள்ள அரசு?
இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நீதிக்கட்சி ஆட்சிதான் 1924ல் உருவாக்கியது. அதன் விவாதங்கள் சட்டமன்றத்தின் நூலகத்தில் உள்ளது. அதை அறநிலையப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், அமைச்சரும், முதல்வரும் படிக்க வேண்டும். கணக்குத் தணிக்கை தான் அதன் பிரதான நோக்கமே தவிர, பக்தி பரப்பும் இலாகாவாக இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை செயல்படுவது சட்ட விரோதமே. சாயமடிப்பதோ, கும்பாபிஷேகம் செய்வதோ, தேர் இழுப்பதோ இத்துறை அதிகாரிகளின் வேலை அல்ல.
இப்போது மதச் சார்பின்மையைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு, பல மாவட்டங்களில் ஆட்சியாளர்களும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களும், தேருக்கு வடம் பிடிப்பது, கும்பாபிஷேகத்தில் பக்தி வேஷம் போட்டுக் காட்டிக் கொள்ளுவது என்பது பகிரங்கமான சட்ட விரோதச் செயல்.
இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் அறப்போர்கள் ஒரு முனையிலும், பொது நல வழக்கு மறுமுனையிலும், பிரச்சாரங்கள் மூன்றாவது முனையிலும் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications