மட்டக்களப்பில் முஸ்லிம்கள் பள்ளி மைதானத்தில் புத்தர் சிலை வைத்த விஷமிகள்!
மட்டக்களப்பு: இலங்கையின் தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணமான மட்டகளப்பு மாவட்டம் ஒட்டமாவடியில் செயல்பட்டு வரும் முஸ்லிம்கள் பள்ளிக்கூட மைதானத்தில் விஷமிகள் புத்தர் சிலையை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு தனியாக நடத்தப்பட்டு வரும் இப்பள்ளிக்கூடத்தில் மர்ம மனிதர்கள் சிலர் இரவோடு இரவாக புத்தர் சிலை ஒன்றை மேஜை மீது வைத்து குடை அலங்காரம் செய்துவிட்டு சென்றுள்ளனர்.
இந்த திடீர் புத்தர் சிலையைக் கண்டு கொதித்த முஸ்லிம்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த பள்ளி மைதானத்துக்கு அருகே சிங்களவரின் புத்த விகாரை ஒன்று உள்ளது. இருதரப்புக்கும் இடையே நீண்டகால இடப் பிரச்சனை இருந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு பள்ளி மைதானத்தின் சுற்று சுவரை புத்த விகாரையின் தலைமை பிக்கு இடித்து தள்ளியதால் பிரச்சனை வெடித்தது.
தற்போதும் இரவோடு இரவாக புத்தர் சிலையை வைத்த விஷமச் செயலில் ஈடுபட்டது புத்த விகாரையை சேர்ந்த சிங்கள பவுத்த பிக்குகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.