புத்தகயாவை இந்தியன் முஜாஹிதீன் தாக்கக்கூடும்: அக்டோபரிலேயே எச்சரித்த டெல்லி போலீஸ்
டெல்லி: புத்தகயா கோவிலில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு பின்னால் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி கோவிலில் இன்று காலை 8 குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் மகாபோதி கோவிலை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் தாக்கக்கூடும் என்று டெல்லி போலீசாரின் சிறப்பு பிரிவு பீகாரின் டிஜிபி மற்றும் கயா மாவட்ட எஸ்.பி. ஆகியோரை கடந்த அக்டோபர் மாதமே எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் நடந்த குண்டுவெடிப்பு குறித்த விசாரணையின்போது அதற்கு காரணமான இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் மகாபோதி கோவிலை தாக்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தான் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான உபைத் உர் ரஹ்மானின் வீட்டில் கடந்த ஆண்டு ஒரு கூட்டம் நடந்துள்ளது. அப்போதே மகாபோதி கோவிலை தாக்கும் திட்டத்திற்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் துணை நிறுவனரான ரியாஸ் பத்கல் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் புத்தகயா குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications