தூத்துக்குடியில் சேது சமுத்திர திட்டத்தை ஆதரித்து ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்: மீனவர்கள் எதிர் போராட்டம்
தூத்துக்குடி: ஒரே நேரத்தில் தூத்துக்குடியில், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க.வினரின் ஆர்ப்பாட்டம் ஒருபுறமும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் நடத்திய எதிர் போராட்டம் மறுபுறமும் அரங்கேறியுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில், தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசுகையில், ‘சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்த கடலேரா மாவட்டம் எந்தளவிற்கு பொருளாதார முன்னேற்றம் அடையும் என்பதனை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. வளர்ச்சிக்கு வித்திடும் இந்த மாபெரும் திட்டத்தை முடக்க முயற்சி நடக்கிறது. கடந்த 2001 மற்றும் 2004 தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. சேது சமுத்திர திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு இப்போது அதை எதிர்க்கிறது. நிறைவேற்றப்பட்டால் கருணாநிதிக்கு பெயர் வந்துவிடும் என அ.தி.மு.க. அரசு நினைக்கிறது. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்துள்ளது. இதை வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்' எனத் தெரிவித்தார்.
அதே நேரத்தில், சேது சமுத்திரத் திட்டத்தை கைவிடக் கோரி, தூத்துக்குடியில் மீனவர்கள் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், சேது சமுத்திரத் திட்டத்தைக் கண்டித்தும், அதை கைவிடக் கோரியும், மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வேம்பார் முதல், பெரியதாழை வரையுள்ள கடற்கரை கிராமங்களில், படகுகள், குடியிருப்புகளில் கறுப்புக்கொடி கட்டப்படுகிறது.தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் செய்யும் மீனவர்கள், சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக, சவப்பெட்டி ஊர்வலத்தையும் நடத்துகின்றனர்.ஒருபுறம் திமுக போராட்டம் மறுபுறம் மீனவர்கள் போராட்டம் என இரண்டு போராட்டங்களால் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பரப் பரப்பு ஏற்பட்டுள்ளது.